
22ஆவது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்தது. அர்ஜெண்டினா - ஃபிரான்ஸ் இடையேயான இறுதிப்போட்டி மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒரு இறுதிப்போட்டிக்கான அனைத்து பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்ததாக அந்த போட்டி அமைந்தது.
இறுதிப்போட்டியின் முதல் பாதியில் அர்ஜெண்டினா 2 கோல்கள் அடிக்க, 2ஆம் பாதியில் ஃபிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாபே 2 கோல்கள் அடித்தார். இதையடுத்து ஆட்டம் டிராவானது. கூடுதல் நேரத்தில் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸியும், ஃபிரான்ஸின் எம்பாப்பேவும் தலா ஒரு கோல் அடிக்க, மீண்டும் ஆட்டம் 3-3 என டிராவானது. அதன்பின்னர் வழங்கப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில் ஃபிரான்ஸ் 2 கோல் மட்டுமே அடிக்க, 4 கோல்கள் அடித்து அர்ஜெண்டினா உலக கோப்பையை வென்றது.
இறுதிப்போட்டியில் ஃபிரான்ஸ் அணியின் வேறு எந்த வீரருமே கோல் அடிக்காத நிலையில், கடுமையாக போராடி 3 கோல்கள் அடித்து ஆட்டத்தை டிரா செய்ய உதவிய எம்பாப்பே, பெனால்டி ஷூட் அவுட்டிலும் கோல் அடித்தார். ஆனால் மற்ற வீரர்கள் கோல் அடிக்காததால் ஃபிரான்ஸ் தோற்றது. இந்த உலக கோப்பையை அர்ஜெண்டினா வென்றிருந்தாலும், தனி ஒருவனாக ஃபிரான்ஸின் வெற்றிக்காக போராடிய எம்பாப்பே, ரசிகர்களின் இதயங்களை வென்றுவிட்டார்.