
2022 ஃபிஃபா உலககோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 6ஆவது முறையாக தகுதி பெற்று அசத்தியுள்ளது. தன்னுடைய 35 வயதில் , ஒரு முறையாவது ஃபிஃபா உலககோப்பையை வெல்ல வேண்டும் என்று முனைப்பில் அவர் விளையாடி வருகிறார்.
நேற்றைய ஆட்டத்தில் கூட பெனால்டியை பயன்படுத்தி அர்ஜென்டினாவின் முதல் கோலை மெஸ்ஸி போட்டார். மேலும், ஆட்டம் முழுவதும் வாய்ப்புகளை உருவாக்கிய மெஸ்ஸி, 2 முறை சிறப்பாக பந்தை சக வீரர் அல்வாரெசிடம் பாஸ் செய்து கோல் போட முடிவு எடுத்தார். இதன் மூலம் அர்ஜென்டினா அணி 3க்கு0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மெஸ்ஸி, “இறுதிப் போட்டிக்கு மீண்டும் ஒரு முறை தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய உலககோப்பை பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதுகிறேன். அடுத்த உலககோப்பை இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது. அது வரை என்னால் விளையாட முடியுமா என தெரியாது. விளையாடினாலும், இப்படி சிறப்பாக செயல்பட்டு, அணியை பைனலுக்கு வரை கொண்டு செல்வேனா என்றும் தெரியாது. வரும் 18ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியே என்னுடைய கடைசி போட்டியாக இருக்கும். அதில் உலககோப்பையை வென்று தருவேன் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.