Advertisement

ஃபிஃபா உலகக்கோப்பை 2022: மீண்டும் மேஜிக் நிகழ்த்திய மெஸ்ஸி; இறுதிப் போட்டிக்கு முன்னேறியது அர்ஜென்டினா!

குரோஷியா அணிக்கெதிரான ஃபிஃபா உலகக்கோப்பை கால்பாந்து அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, 6ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan December 14, 2022 • 08:54 AM
Messi's Goal Guides Argentina Into Final With 3-0 Win Over Croatia
Messi's Goal Guides Argentina Into Final With 3-0 Win Over Croatia (Image Source: Google)

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்கு குரோஷியா, அர்ஜென்டினா, மொராக்கோ, பிரான்ஸ் ஆகிய அணிகள் முன்னேறின. அதில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியை எதிர்த்து குரோஷியா அணி விளையாடியது. ஒரு பக்கம் லயோனல் மெஸ்ஸி, இன்னொரு பக்கம் லூகா மோட்ரிச் இருந்ததால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

முக்கியமான ஆட்டம் என்பதால், ஒரு அணிகளுமே தொடக்கம் முதல் எச்சரிக்கையாக விளையாடினர். ஒவ்வொரு முறையும் எதிரணி கோல் போஸ்ட் பக்கம் பந்து கொண்டு சென்ற போதும், தடுப்பாட்ட வீரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் அர்ஜென்டினா வீரர் ஆல்வரஸ் தனது வேகத்தை பயன்படுத்தி பந்தை கோல் அடிக்க எடுத்து சென்றார். ஆனால் குரோஷியா கோல்கீப்பர் செய்த தவறு காரணமாக கோல் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் அர்ஜென்டினா அணிக்கு ஆட்டத்தின் 34ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

இந்த பெனால்டியை நட்சத்திர வீரர் மெஸ்ஸி அடிக்க தயாரானார். ஆனால் பெனால்டி வாய்ப்புகளில் மெஸ்ஸி சொதப்பி இருப்பதால், இதனை எவ்வாறு எதிர்கொள்ள போகிறார் என ரசிகர்கள் சந்தேகத்துடன் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் மெஸ்ஸி எதையும் பற்றியும் கவலைப்படாமல் கோல் போஸ்டின் டாப் கார்னருக்கும் வேகமாக பந்தை தள்ளினார்.

இதனை தடுக்க குரோஷியா கோல்கீப்பர் லிவாகோவிச்சுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இந்த கோல் மூலம் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதேபோல் அர்ஜென்டினா அணிக்காக உலகக்கோப்பை தொடரில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் லயோனல் மெஸ்ஸி முதலிடம் பிடித்தார்.

இந்த கோல் அடித்த அடுத்த சில நிமிடங்களில் கவுண்டர் அட்டாக்கில் பாய்ந்து தனி ஆளாக ஆல்வரஸ் ஆட்டத்தின் 39ஆவது நிமிடத்தில் அசாத்தியமான இரண்டாவது கோல் விளாசினார். இதனால் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை பெற்றது. இது குரோஷியா வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டமும் முடிவுக்கு வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்த்தில் குரோஷியா அணி தொடக்கம் முதலே கோல் அடிக்க முயற்சித்தது. ஆனால் அனைத்து முயற்சிகளையும் அர்ஜென்டினா தடுப்பாட்ட வீரர்களும், கோல்கீப்பர் மார்ட்டினஸும் தடுத்து கொண்டே இருந்தனர். இதனிடையே 69ஆவது நிமிடத்தில் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி, குரோஷியா அணியின் கார்டியோல், சோசா உள்ளிட்ட 3 வீரர்களை டிரிபிள் செய்து கொடுத்த பாஸை, மீண்டும் ஆல்வரஸ் கோல் அடித்து அசத்தினார்.

இதன் மூலம் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை பெற்றது. இதன் பின்னர் குரோஷியா அணி வீரர்கள் பெரிதாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இறுதியாக ஆட்ட நேர முடிவில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது. இதன் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு 6வது முறையாக அர்ஜென்டினா அணி முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement