
பெங்களூருவில் 14ஆவது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரை இறுதி சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், குவைத்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. சாம்பியன் கோப்பைக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.
இரு அணிகளும் ஆட்ட நேரத்தில் தலா ஒரு கோல் அடித்து சமனில் இருந்தன. இதனால் இப்போட்டியில் பெனால்டி ஷாட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில், இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி முதல் கோல் அடித்து தொடங்கி வைக்க, சந்தேஷ் ஜிங்கன், சுபாஷிஷ் போஸ் உள்ளிட்டோர் பெனால்டி சரியாக பயன்படுத்தி 5 கோல் அடிக்க, குவைத் சார்பில் 4 கோல் மட்டுமே அடிக்க முடிந்தது.
இந்திய அணி வெற்றி பெற பெனால்டி ஷாட் அவுட்டில் திறமையாக கோல் கீப்பிங் செய்து குவைத் அணியை தடுத்து முக்கிய காரணமாக இருந்தார் கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சந்து. இதன்மூலம் குவைத் அணியை வீழ்த்தியதோடு 9ஆவது முறையாக பட்டம் வென்று அசத்தியது இந்தியா.