வீராங்கனைகளுக்கான ஆடைக் கட்டுப்பாட்டை நீக்கியது விம்பிள்டன் நிர்வாகம்!
டென்னிஸ் வீராங்கனைகள் இனி பல்வேறு வண்ணங்களிலும் அண்டர் ஷார்ட்ஸ் அணியலாம் என ஆடைக் கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளது விம்பிள்டன் நிர்வாகம்.
உலகின் பழமையான கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள். இது 1877ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. ஆரம்பத்தில் ஆண்களுக்கான பிரிவில் மட்டுமே நடத்தப்பட்ட இத்தொடர், 1884ஆம் ஆண்டுமுதல் மகளிர் பிரிவிலும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. புல்தரையில் நடத்தப்படும் ஒரே கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி இதுவாகும்.
மற்ற டென்னிஸ் போட்டிகளில் எல்லாம், எந்த நிறத்தில் வேண்டுமானாலும் வீரர்களும் வீராங்கனைகளும் உடை அணியலாம். ஆனால் விம்பிள்டன் போட்டியைப் பொறுத்தவரை வெள்ளை நிறத்தில் மட்டும்தான் உடை அணிய வேண்டும் என்ற விதி உள்ளது.
இந்த விதியால் தாங்கள் மாதவிடாய் காலத்தில் விளையாட நேரிடும்போது மன உளைச்சலுக்கு ஆளாவதாக வீராங்கனைகள் நீண்ட காலமாக கவலை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் விம்பிள்டன் போட்டியை நடத்தும் ஆல் இங்கிலாந்து கிளப் ஆடைக் கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளது. இனி வீராங்கனைகள் அடர் நிற அண்டர் ஷார்ட்ஸ் அணியலாம். ஆல் ஒயிட் ஆடைக் கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய விம்பிள்டன் தலைமை செயல் அதிகாரி சாலி போல்டன், “விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் களத்தில் தங்கள் சிறப்பான திறமையைக் காட்ட என்ன தேவை எனக் கூறுகிறார்கள் அதை செய்யத் தயாராக இருக்கிறோம். அவர்கள் குரல்களுக்கு செவி கொடுக்கிறோம்.
வீரர்கள், விம்பிள்டன் போட்டி பங்குதாரர்கள், நிர்வாகக் குழு என அனைவரும் ஒருமித்த கருத்தை எட்டிய நிலையில் ஆடை கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளோம். அடுத்த ஆண்டு முதல் விம்பிள்டன் போட்டியில் விளையாடும் பெண்கள் அவர்கள் விரும்பினால் வெள்ளை தவிர்த்து பல்வேறு வண்ணங்களிலும் அண்டர்ஷார்ட்ஸ் அணிந்து கொள்ளலாம்.
நாங்கள் விதிகளை தளர்த்தியுள்ளது வீராங்கனைகள் விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்தி கூடுதல் திறமையை வெளிப்படுத்த உதவும் என நம்புகிறோம்" என்று கூறியுள்ளார். அண்மையில் மான்செஸ்டர் சிட்டி கால்பந்து மகளிர் அணி ஆடைக் கட்டுப்பாட்டை தளர்த்தியதும் குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now