
பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று வெலிங்டன் மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள நியூஸிலாந்து - பிலிப்பைன்ஸ் அணிகள் மோதின. இதில் அறிமுக அணியான பிலிப்பைன்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் நியூஸிலாந்தை தோற்கடித்தது. இந்த போட்டியை காண 33 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர்.
நியூஸிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் 1995ஆம் ஆண்டு சாம்பியனான நார்வே அணியை வீழ்த்தி உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்திருந்தது. இதேபோன்ற செயல்திறனை பிலிப்பைன்ஸ் அணிக்குஎதிரான ஆட்டத்திலும் நியூஸிலாந்து வீராங்கனைகள் வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆட்டத்தின் 24ஆவது நிமிடத்தில் பிலிப்பைன்ஸ் அணிக்கு ப்ஃரீகிக் கிடைத்தது.
இதில் பாக்ஸ் பகுதிக்குள் உதைக்கப்பட்ட பந்தை நியூஸிலாந்து வீராங்கனைகள் சரியாக தடுக்கவில்லை. இதை பயன்படுத்தி சாரா எக்ஸ்விக் சரினா போல்டனுக்கு அனுப்ப, அவர் தலையால் முட்டி பந்தை கோலாக்கினார். இதன் மூலம் உலகக் கோப்பையில் பிலிப்பைன்ஸ் அணிக்காக முதல் கோலை அடித்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் சரினா போல்டன்.