Advertisement

இந்திய மல்யுத்த வீரர்கள் கைது- உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம்!

பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்திய மல்யுத்த வீரர்களை கைது செய்ததற்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan May 31, 2023 • 12:41 PM
Wrestling mess: Sport's governing body condemns manhandling of grapplers, threatens suspension if el
Wrestling mess: Sport's governing body condemns manhandling of grapplers, threatens suspension if el (Image Source: Google)

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகாா் கூறி, கடந்த ஒரு மாதமாக தில்லி ஜந்தா் மந்தரில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகத், வீரா் பஜ்ரங் புனியா உள்ளிட்டோா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை கோரி வீராங்கனைகள் தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த டெல்லி காவல் துறையினருக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டவுடன்,டெல்லி ஜந்தா் மந்தரில் இருந்து இவா்கள் தடையை மீறி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்றனா். அவா்களைத் தடுத்து நிறுத்தி தடுப்புக் காவலில் கொண்டு சென்ற டெல்லி காவல்துறையினர், சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில், வீரர்களின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து உலக மல்யுத்த கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரின் பாலியல் தொல்லை தொடர்பான விவகாரத்தில் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடிவருகின்றனர். இதை உலக மல்யுத்த கூட்டமைப்பு கவனித்துவருகிறது. ஆரம்பத்திலேயே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கண்டிருந்தால் இந்தச் சூழலைத் தவிர்த்திருக்கலாம். மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணி செல்ல முயன்றபோது கைதுசெய்தது மற்றும் ஒரு மாதமாக அவர்கள் போராடிய இடத்திலிருந்து வெளியேற்றியது பெரும் துயரளிக்கும் செய்தியாகும்.

இந்தச் செயல்களுக்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. குற்றம்சாட்டப்பட்ட மல்யுத்த சங்கத் தலைவர் மீதான விசாரணையில் முன்னேற்றம் இல்லாதது இந்த பிரச்னைக்கு முக்கியக் காரணம். உலக மல்யுத்த கூட்டமைப்பு மல்யுத்த வீரர்களுடன் மீண்டும் ஒரு சந்திப்பை நடத்தி அவர்களின் பிரச்னையைக் கேட்டறிந்து பாதுகாப்பு பற்றியும் ஆலோசனை நடத்தும். மல்யுத்த வீரர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். மேலும், ஒருங்கிணைந்த உலக மல்யுத்த கூட்டமைப்பு, இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு (ஐஓஏ), இந்திய மல்யுத்த சம்மேளனம் ஆகியவற்றின் கமிட்டியிடமிருந்து அடுத்த பொது கூட்டமைப்பு தேர்வு குறித்து 45 நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும்.

இதைச் செய்யத் தவறும் பட்சத்தில் உலக மல்யுத்த கூட்டமைப்பு, இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்யும். மேலும் மல்யுத்த வீரர்களை ‛நியூட்ரல் பிளாக்' உடன் போட்டியில் பங்கேற்க வழிவகை ஏற்படுத்தப்படும். இந்த விஷயத்தில் ஏற்கெனவே உலக மல்யுத்த கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதையும், இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெறவிருந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான இடம் டெல்லியிலிருந்து மாற்றப்பட்டது என்பதையும் நினைவூட்டுகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement