Ecb
ட்வீட்கள் ‘ரீவிட்டுகளாக’ மாறிய சம்பவம்; அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் இங்கிலாந்து வீரர்கள்!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 2ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டி டிராவில் முடிவடைந்தாலும், பெரும் பரபரப்பு மைதானத்துக்கு வெளியே நடந்து கொண்டிருந்தது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கினார் பந்துவீச்சாளர் ஒல்லி ராபின்சன். முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ராபின்சன். ஆனால் அவரின் மகிழ்ச்சி அன்றைய நாள் முழுவதும் கூட நீடிக்கவில்லை.
இதற்கு காரணம் அவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட ட்வீட் என தெரியவந்தது. 8 வருடங்களுக்கு முன்பு சில ட்வீட்களை வெளியிட்டிருந்த ராபின்சன், அதில் இனவெறியை தூண்டும் விதமாகவும், பாலியல் ரீதியாக சில வார்த்தைகளையும் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் இனவெறி பிடித்த ராபின்சனை அணியிலிருந்து உடனே நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக, ராபின்சன் கூறிய விளக்கத்தை ஏற்காத இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அவரது இந்த ட்வீட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க சில ஆய்வுகளையும் மேற்கொண்டது.