PAK vs ENG, 1st Test: முற்சதம் விளாசிய ஹாரி புரூக்; தோல்வியை தவிர்க்க போராடும் பாகிஸ்தான்!

Updated: Thu, Oct 10 2024 19:47 IST
Image Source: Google

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயானமுதல் டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பந்துவீச அழைத்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஷான் மசூத், அகா சல்மான் மற்றும் அப்துல்லா ஷஃபிக் ஆகியோரது சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 556 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ஷான் மசூத் 151 ரன்களையும், அப்துல்லா ஷஃபிக் 102 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அகா சல்மான் 104 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜக் லீச் 3 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் கேப்டன் ஒல்லி போப் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.  இதனால் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 96 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது ஸாக் கிரௌலி 78 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பென் டக்கெட்டும் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு, 84 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்ததுடன் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.  

பின்னர் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்கள் சதங்களையும் பதிவுசெய்து மிரட்டினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 492 ரன்களைக் குவித்தத. இந்நிலையில் இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை ஜோ ரூட் 176 ரன்களுடனும், ஹாரி புரூக் 141 ரன்களுடனும் தொடர்ந்தனர். இன்றைய நாளிலும் அபாரமாக விளையாடி வந்த இருவரும் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளுக்கும் பறக்கவிட்டு அசத்தினர்.

இப்போட்டியில் ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 6ஆவது இரட்டை சதத்தையும், அவருடன் இணைந்து விளையாடிய ஹாரி புரூக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன் காரணமாக இருவரது பார்ட்னர்ஷிப்பும் 400 ரன்களைக் கடந்தது. அதன்பின் இப்போட்டியில் முற்சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 262 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து முற்சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அதேசமயம் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ஹாரி புரூக் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் முற்சதத்தை விளாசியதுடன், இங்கிலாந்து அணிக்காக கடந்த 30 ஆண்டுகளில் முற்சதம் விளாசிய முதல் வீரர் எனும் சாதனையையும் படைத்து அசத்தினார். பின்னர் 29 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 317 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹாரி புரூக் விக்கெட்டை இழக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 823 ரன்களைக் குவித்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் நசீம் ஷா மற்றும் சைம் அயுப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து 267 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அதன்படி இன்னிங்ஸின் முதல் பந்திலேயே அப்துல்லா ஷஃபிக் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 11 ரன்களில் கேப்டன் ஷான் மசூத்தும், 5 ரன்களில் பாபர் ஆசாமும் விக்கெட்டை இழக்க, அணியின் மற்றொரு தொடக்க வீரரான சைம் அயுப்பும் 25 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய முகமது ரிஸ்வான் 10 ரன்களிலும், சௌத் சகீல் 29 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். 

Also Read: Funding To Save Test Cricket

பின்னர் இணைந்துள்ள அகா சல்மான் - அமீர் ஜமால் இணை நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதனால் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. இதில் அகா சல்மான் 41 ரன்களுடனும், அமீர் ஜமால் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியில் கஸ் அட்கின்சன் மற்றும் பிரைடன் கார்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து 115 ரன்கள் பின் தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி நாளை 5ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை