பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று கராச்சியில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. 

Advertisement

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷாஃபிக் 7 ரன்களுக்கும், இமாம் உல் ஹக் 24 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதன்பின் 3ஆம் வரிசையில் இறங்கிய ஷான் மசூத் 3 ரன்களுக்கும், சௌஷ் ஷகீல் 22 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, 110 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது.

Advertisement

இதையடுத்து கேப்டன் பாபர் ஆசாம் - சர்ஃப்ராஸ் அஹமது இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் 3 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் ஆட வாய்ப்பு பெற்ற சர்ஃபராஸ் அகமது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி. அரைசதம் அடித்தார். பாபர்  அசாம் - சர்ஃபராஸ் அகமது ஆகிய இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டுக்கு 194 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையில் குவித்தனர். 

மறுபக்கம் கேப்டன் பாபர் ஆசாம் சதம் விளாச, மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சர்ஃப்ராஸ் அஹ்மத் 86 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்களைச் சேர்த்தது.

இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாம் 161 ரன்களுடன் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நௌமன் அலி, முகமது வாசிம் ஜூனியர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆகா சல்மான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 4ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியுள்ளார். அதன்பின் அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்த அவர், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 103 ரன்கள் எடுத்த நிலையில் ஆகா சல்மான் ஆட்டமிழந்து வெளியேறினார்.

Advertisement

இதனால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சௌதீ 3 விக்கெட்டுகளையும், அஜாஸ் படேல், மைக்கேல் பிரேஸ்வெல், இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு, டெவான் கான்வே - டாம் லேதம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் 150 ரன்களைத் தாண்டியது.

இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 163 ரன்களைச் சேர்த்தது. இதில் டெவான் கான்வே 82 ரன்கலுடனும், டாம் லேதம் 78 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து நாளை 273 ரன்கள் பின் தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News