இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது துனித் வெல்லாலகே, கமிந்து மெண்டிஸ் ஆகியோரது பொறுப்பான ஃபினிஷிங்கின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்தாலும் 240 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் 40 ரன்களையும், துனித் வெல்லாலகே 39 ரன்களையும் சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். அதன்பின் 241 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மா 29 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மா 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 64 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில்லும் 35 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்த களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருவதால் இந்திய அணி தடுமாறி வருகிறது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் பிடித்த கேட்ச் குறித்தான காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அதன்படி ஜெஃப்ரி வண்டர்சே வீசிய 18ஆவது ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஷுப்மன் கில் அதனை கட் அடிக்க முயற்சித்தார். ஆனால் பந்து அவரது பேட்டில் பட்டு எட்ஜாகவே, முதல் ஸ்லீப்பில் நின்றிருந்த கமிந்து மெண்டிஸ் பந்தை சரியாக கணித்ததுடன் ஒற்றைகையில் கேட்சையும் பிடித்து அசத்தினார்.
இதனால் 3 பவுண்டரிகளுடன் 35 ரன்களைச் சேர்த்து அரைசதத்தை நெருங்கிக்கொண்டிருந்த ஷுப்மன் கில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேசமயம் இந்திய அணி 27 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் அக்ஸர் படேல் - வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.