தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 என்றழைக்கப்படும் டி20 தொடரை நடத்தி வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தற்போதில் இருந்தே தயாராகி வருகிறது. அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் ஏலத்திற்கு முன்னரே வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம் காட்டின.
இந்நிலையில் எதிர்வரவுள்ள மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடரில் சமீபத்தில் ஓய்வை அறிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக், பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். இதன்மூலம் இத்தொடரில் பங்கேற்கும் முதல் இந்திய வீரர் எனும் பெருமையையும் அவர் பெறவுள்ளார். இந்நிலையில், இத்தொடரில் இந்திய அணியைச் சர்ந்த சில முன்னாள் வீரர்களும் கவனம் ஈர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் யார் யார் என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
1.அம்பத்தி ராயுடு (Ambati Rayudu)
இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இஅர் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸின் கரீபியன் பிரீமியர் லீக், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐஎல்டி20 தொடர் உள்ளிட்டவற்றில் பங்கேற்றுள்ளார். மேலும் அவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்துடன் நல்ல உறவைக் கொண்டிருப்பதன் காரணமாக, எஸ்ஏ20 தொடரில் அவர் பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.
2. ராபின் உத்தப்பா (Robin Uthappa)
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்டரான ராபின் உத்தப்பா, ஏற்கனவே ஒருமுறை எஸ்ஏ20 லீக் தொடரின் வீரர்கள் ஏலத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளார். ஆனால், அதில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடும் திறனை கொண்டுள்ள ராபின் உத்தப்பா, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறந்து விளங்கும் பேட்டராகவும் அறியப்படுகிறார். மேற்கொண்டு அவர் சிறந்த விக்கெட் கீப்பராகவும் செயல்படுவார் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
3. கேதர் ஜாதவ் (Kedar Jadhav)
எஸ்ஏ20 2025 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க கூடிய இந்திய வீரர்களில் கேதர் ஜாதவும் ஒருவராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஓய்வை அறிவித்த கேதர் ஜாதவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஓய்வு பெறும் தருணத்தில், அவர் சில சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அவரது தனித்துவமான பந்துவீச்சின் மூலம், அவர் ஒரு ஃபினிஷராகவும் ஆஃப் ஸ்பின்னராகவும் அணிக்கு சிறந்த தேர்வாக இருக்க முடியும்.