PAK vs ENG, 3rd Test: சதமடித்து அணியை முன்னிலைப் படுத்திய சௌத் சகீல்; இங்கிலாந்து அணி தடுமாற்றம்!

Updated: Fri, Oct 25 2024 21:05 IST
Image Source: Google

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து டெஸ்ட் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியுள்ளது.

இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஜேமி ஸ்மித் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் அரைசதம் கடந்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 267 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக் ஜேமி ஸ்மித் 89 ரன்களையும், பென் டக்கட் 52 ரன்களையும் சேர்த்தனர். 

பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சஜித் கான் 6 விக்கெட்டுகளையும், நோமன் அலி 3 விக்கெட்டுகளையும் கைப்பறினர். இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் மீண்டும் சோபிக்க தவறி சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த கேப்டன் ஷான் மசூத் - சௌத் சகீல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்களைச் சேர்த்தது.

இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஷான் மசூத் மற்றும் சௌத் சகீல் ஆகியோர் தலா 16 ரன்களுடன் தொடர்ந்தனர். இதில் ஷான் மசூத் 26 ரன்களுடன் பெவிலியன் திரும்ப, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌத் ஷகீல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினார்.  அதேசமயம் அவருன் இணைந்து விளையாடிய முகமது ரிஸ்வான் 25 ரன்னிலும், ஆகா சல்மான் ஒரு ரன்னிலும், அமர் ஜமால் 14 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய நோமன் அலியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌத் சகீல் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய நோமன் அலி 45 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 134 ரன்களைச் சேர்த்திருந்த சௌத் சகீலும் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் சஜித் கான் தனது பங்கிற்கு 48 ரன்களைச் சேர்க்க, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 344 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் ரெஹான் அஹ்மத் 4 விக்கெட்டுகளையும், சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

Also Read: Funding To Save Test Cricket

இதையடுத்து 77 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்களை எடுத்துள்ளது. இதில் ஜோ ரூட் 5 ரன்களுடனும், ஹாரி புரூக் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி 2  விக்கெட்டுகளையும், சஜித் கான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை