பாக்ஸிங் டே டெஸ்ட்: சதத்தை தவறவிட்ட ஜெய்ஸ்வால்; பேட்டிங்கில் மீண்டும் சொதப்பும் இந்தியா!

Updated: Fri, Dec 27 2024 13:02 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன. மேலும் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.

இதையடுத்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று  (டிசம்பர் 26) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் அறிமுக தொடக்க வீரர் சாம் கொன்ஸ்டாஸ் அரைசதம் கடந்ததுடன் 60 ரன்களைச் சேர்க்க மற்றொரு தொடக்க வீர்ரான உஸ்மான் கவாஜா 57 ரன்களையும் சேர்த்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னேவும் அரைசதம் கடந்த் கையோடு 72 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட், மிட்சல் மார்ஷ் ஆகியோர் சொற்ப ரன்களிலும், அலெக்ஸ் கேரி 31 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்த கேப்டன் பட் கம்மின்ஸ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைக்க உதவினார். இதில் கம்மின்ஸ் 49 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பினை ஒரு ரன்னில் தவறவிட்டார்.அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 34ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

பின் ஸ்டீவ் ஸ்மித் 13 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என 140 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்த களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 474 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு மீண்டும் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. 

அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 3 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேஎல் ராகுலும் 24 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் பாட் கம்மின்ஸிடம் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்தும் அசத்தினார். இதன்மூலம் இவர்கள் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

Also Read: Funding To Save Test Cricket

பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 82 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து விராட் கோலியும் 36 ரன்கலில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆகாஷ் தீப்பும் ரன்கள் ஏதுமின்றி பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ரிஷப் பந்த் 6 ரன்களுடனும், ஜடேஜா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் பாட் கம்மின்ஸ், ஸ்காட் போலண்ட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 310 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை