ஜஸ்ப்ரித் பும்ரா நமது தேசத்தின் பெரும் சொத்து - ஆகாஷ் சோப்ரா!

Updated: Wed, Feb 22 2023 21:57 IST
Aakash Chopra on Jasprit Bumrah missing IND vs AUS Test series (Image Source: Google)

இந்திய அணியின் மிகப்பெரிய தூணாக இருந்து வருபவர் ஜஸ்பிரித் பும்ரா தான். ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் இந்திய அணியில் விளையாடுவதே இல்லை. அவர் எங்கு சென்றார் என்ற கேள்விகள் கூட மறைந்துவிட்டன. முதுகில் ஏற்பட்ட காயத்தால் கடந்தாண்டு ஜூலை மாதத்தின் போது பெங்களூரு என்சிஏவுக்கு சென்ற அவர், அதன்பின்னர் செப்டம்பரில் ஆஸ்திரேலிய தொடருக்கு வந்தார். எனினும் உடனடியாக அவரின் ஃபிட்னஸ் சரியாக இல்லையென கூறி அனுப்பிவிட்டனர்.

சுமார் 6 மாத காலமாக ஓய்விலேயே இருந்து வரும் ஜஸ்பிரித் பும்ரா தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை மூலமாக மீண்டும் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அவரின் பெயர் இடம் பெறவில்லை. இன்னும் அதிகாரிகளிடம் இருந்து அனுமதி சான்றிதழ் கிடைக்காததால் பெயர் சேர்க்கப்படவில்லை எனக்கூறப்பட்டது.

இதன் மூலம் ஜஸ்பிரித் பும்ரா நேரடியாக ஐபிஎல் தொடருக்கு தான் வருவார் என்பது உறுதியாகியுள்ளது. ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. தேசத்திற்காக விளையாட தயாராக இல்லை எனக்கூறும் பும்ரா, அதிக பணம் கொட்டும் ஐபிஎல்-க்கு மட்டும் தயாராகிவிடுவார் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதில் பும்ராவுக்கு ஆதரவாக ஆகாஷ் சோப்ரா களமிறங்கியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், “பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து பும்ராவுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அவர் அப்படியே 2 டெஸ்ட் போட்டிகளுக்கும், ஒருநாள் போட்டிக்கும் வந்திருந்தாலும் கூட என்ன செய்துவிடுவார்கள்? அவரை விளையாட வைக்காமல் ஓய்வு கொடுத்தாக வேண்டும். ஏனென்றால் அவர் நமது தேசத்தின் பெரும் சொத்து. மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

நீண்ட நாட்களாக விளையாடாமல் இருக்கும் ஒரு வீரர், முதலில் பழைய ஃபார்முக்கு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு ஓய்வு கொடுத்தால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராக முடியும். பலரும் அவர் ஐபிஎல்-க்காக செயல்படுகிறார் என விமர்சிக்கின்றனர். ஆனால் அவரை அப்படியே யாரும் இங்கு விட்டுவிடவில்லை. பிசிசிஐ ஸ்பெஷல் ஏற்பாட்டினை செய்து தான் உள்ளது.

பும்ராவிடம் நேரடி தொடர்பில் இருக்கும் வகையில் மருத்துவர்களை நியமித்துள்ளது. அவர்கள் பும்ராவின் பணிச்சுமையை பார்த்துக்கொள்வார்கள். எனவே எங்கு அவரை விட வேண்டும், எங்கு நிறுத்த வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். இதுமட்டுமல்லாமல் எந்தவொரு ஐபிஎல் அணியுமே ஒரு வீரரை தேசத்திற்காக விளையாட வேண்டாம் எனக்கூறாது. நாடு தான் முக்கியம் என்று தான் யாராக இருந்தாலும் நினைப்பார்கள்” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை