இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நேற்று இந்தூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்கிற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றியது.

Advertisement

இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் துணை கேப்டனான ஹார்டிக் பாண்டியா பேட்டிங்கில் 38 பந்துகளை சந்தித்து மூன்று பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் என 54 ரன்கள் எடுத்து அசத்தினார். அதோடு மட்டுமின்றி பந்து வீச்சிலும் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய பாண்டியா 6 ஓவர்கள் பந்துவீசி 37 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

Advertisement

அதிலும் குறிப்பாக நியூசிலாந்து அணியின் அதிரடி துவக்க வீரரான பின் ஆலனை போட்டியின் இரண்டாவது பந்திலேயே கிளீன் போல்டாக்கி வெளியேற்றி இருந்தார். இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அசத்திய பாண்டியா வெற்றிக்கு பின்னர் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். 

இது குறித்து பேசிய அவர், “நான் எப்பொழுதுமே புதுப்பந்தில் பந்து வீசுவதை மகிழ்ச்சியாக செய்து வருகிறேன். இன்றைய நாள் எனக்கு மிகவும் நல்ல நாளாக இருந்தது. எனக்கு இந்த நாள் ஒரு திருப்திகரமான நாளாகவும் அமைந்தது. ஏனெனில் என்னால் பந்தினை இருபுறமும் ஸ்விங் செய்து பந்துவீச முடிந்தது. சமீபத்தில் தான் நான் இரண்டு புறமும் ஸ்விங் செய்து பந்துவீச பழகி வருகிறேன். அந்த வகையில் இந்த போட்டியில் என்னால் சிறப்பாக பந்துவீச முடிந்ததை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது.

நான் ஒரு இடைவெளிக்கு பிறகு இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்கும் போது ஏகப்பட்ட பயிற்சிகளை மேற்கொண்டேன். அதிலும் குறிப்பாக பந்துவீச்சில் என்னுடைய தரத்தினை மேம்படுத்திக் கொள்ளவும் இன்னும் சிறப்பாக பந்துவீச வேண்டும் என்பதில் அதிக கவனத்தை செலுத்தி இருந்தேன். அந்த வகையில் இந்த தொடர் முழுவதுமே என்னால் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட முடிந்தது. இந்த விடயம் எனக்கு மேலும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

அதேபோன்று நானும் ஷர்துல் தாகூரும் பேட்டிங் செய்யும்போது அவர் என் மீது நல்ல நம்பிக்கை வைத்தார். அதனால் அவருடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க முடிந்தது. அதோடு அவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த மைதானத்தில் 350 முதல் 360 ரன்கள் வரை சேசிங் செய்ய முடியும். அதனால் சற்று கூடுதலாக ரன்களை குவிக்க நினைத்தோம்” என தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News