மோசமான பேட்டிங்கே எங்கள் தோல்விக்கு காரணம் - மேத்யூ வேட்!

Updated: Mon, Dec 04 2023 10:50 IST
மோசமான பேட்டிங்கே எங்கள் தோல்விக்கு காரணம் - மேத்யூ வேட்! (Image Source: Google)

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது டி20 போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஸர் படேல் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களைச் சேர்த்தது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களையும், அக்ஸர் படேல் 31 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு பென் மெக்டர்மோட் 54 ரன்களையும், கேப்டன் மேத்யூ வேட் 22 ரன்களை எடுத்த போதும் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். 

இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றதுடன், 4-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய மேத்யூ வெட் , “நாங்கள் இன்றைய ஆட்டத்தில் நன்றாகவே பந்து வீசியதாக கருதுகிறேன். 160 ரன்கள் என்ற இலக்கு நிச்சயமாக இந்த மைதானத்தில் வெற்றிகரமாக துரத்தக்கூடிய ஸ்கோர் தான். ஆனால் கடைசி ஐந்து ஓவர்களில் நாங்கள் மிகவும் மோசமான வகையில் பேட்டிங் செய்தோம். அது ஏமாற்றத்தை கொடுக்கிறது. ஸ்பின்னர்களுக்கு எதிராக இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் பேட்டிங்கில் விளையாடினால் நன்றாக இருக்கும் என நான் எதிர்பார்த்தேன்.

நாங்கள் அடுத்த டி20 உலக கோப்பை நோக்கி தான் அணியை கட்டமைத்து வருகிறோம். இதில் என்னுடைய பொறுப்பு பேட்டிங்கில் இறுதிக்கட்டத்தில் டிம் டேவிட், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோரின் களம் இறங்கி விளையாட வேண்டும். அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வரும் டி20 உலக கோப்பை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்று இருந்தால் மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் தொடரின் ஸ்கோர் இருந்திருக்கும்.

ஆனால் இந்த தொடர் எவ்வளவு கடினமாக இருந்தது என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு. இந்த தொடரில் நாங்களும் நன்றாக தான் விளையாடினோம் என நினைக்கிறேன். ஆனால் இந்திய வீரர்கள் ஒவ்வொரு பிரிவிலும் எங்களை விட சிறப்பாக விளையாடி வீழ்த்தி விட்டார்கள். இந்த தொடர் மூலம் நாங்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்தத் தொடரில் வாய்ப்பு கிடைத்த இளம் வீரர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.இது போன்ற கடினமான ஆடுகளத்தில் விளையாடும் வாய்ப்பு எங்களுக்கு நிச்சயம் கிடைக்காது” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை