ஆஸ்திரேலிய தேர்வுகுழுவை கடுமையாக விமர்சித்த சுனில் கவஸ்கர்!

Updated: Mon, Mar 06 2023 15:27 IST
Australian Selectors Should Resign If They Have Any Sense Of Responsibility, says Sunil Gavaskar (Image Source: Google)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி மூன்றாவது டெஸ்டில் சிறப்பான முறையில் பதிலடி கொடுத்து வெற்றி பெற்றது. இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி வரும் ஒன்பதாம் தேதி வியாழக்கிழமை அகமதாபாத்தில் தொடங்குகிறது.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்த வரை தொடரை சமன் செய்ய வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கும் நிலையில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இந்த நிலையில் ஆஸ்திரேலிய தேர்வுக்குழு மீது சுனில் கவாஸ்கர் கடும் கண்டனங்களை தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், “முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் பல வீரர்கள் குறித்து பேசி வருகிறார்கள். சிலர் ஆடுகளம் குறித்து பேசி வருகிறார்கள். ஆனால் உண்மையிலே அவர்கள் தாக்க வேண்டியது ஆஸ்திரேலிய தேர்வு குழுவினரை தான். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கு முழு உடல் தகுதி பெற முடியாத நிலையில் தேர்வு குழுவினர் எப்படி ஸ்டார்க் மற்றும் கேமரான் கிரீனை தேர்வு செய்தார்கள்.

இரண்டு டெஸ்ட் போட்டி என்பது பாதி தொடர் போய்விட்டது. மூன்று வீரர்கள் இல்லை என்றால் வெறும் 13 வீரர்களை வைத்து எப்படி ஒரு அணி தேர்வு செய்ய முடியும். அதன்பிறகு மேத்தீவ் குஹான்மேனை தேர்வுக்குழுவினர் ஆஸ்திரேலியாவில் இருந்து வர வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே இதே போன்று ஒரு வீரர் அணியில் இருக்கிறார். 

அணியில் இருந்த வீரர் சரியில்லை என தெரிந்தால் அவரை ஏன் முதலில் நீங்கள் தேர்வு செய்தீர்கள். இதன் மூலம் வெறும் 11, 12 வீரர்களை வைத்துதான் ஆஸ்திரேலியா முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆஸ்திரேலிய தேர்வு குழுவினருக்கு பொறுப்பு என்று ஏதாவது ஒன்று இருந்தால், அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தால் கூட தேர்வு குழுவினர் பதவியில் இருந்து செல்வதுதான் சரி” என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பு பல வீரர்கள் காயம் காரணமாக விளையாடாமல் இருந்தனர். மேலும் தொடரின் பாதியில் வார்னர், பேட் கம்மின்ஸ்,ஏகார் போன்ற வீரர்கள் விலகினார்கள். இதனை குறி வைத்து கவாஸ்கர் பேசியிருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை