இந்திய மகளிர் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வங்கதேச அணியை பந்துவீச அழைத்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனா தனது விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அதன்பின் ஷஃபாலியுடன் இணைந்த யஷதிகா பாட்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷஃபாலி வர்மா 31 ரன்களுக்கும், யஷ்திகா பட்டியா 36 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 30 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ரிச்சா கோஷ் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் சாஜனா 11 ரன்களுக்கும், பூஜா வஸ்திரேகர் 4 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

அதன்பின் அதிரடியாக விளையாடிவந்த ரிச்சா கோஷ் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, இந்திய மகளிர் அணியும் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் ரபேயா கான் 3 விக்கெட்டுகளையும், மருஃபா அக்தர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் திலாரா அக்தர் 4 ரனக்ளுக்கும், சோபனா 5 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தார். 

அவர்களைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை முர்ஷிதா கதும் 13 ரன்களோடு நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் நிகர் சுல்தானா ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபக்கம் களமிறங்கிய ஃபஹிமா கதும் ஒரு ரன்னிலும், ஷொர்னா அக்தர் 11 ரன்களிலும், ரபேயா கான் 2 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதேசமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகர் சுல்தானா தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 51 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

இதனால் வங்கதேச அணியின் தோல்வியும் உறுதியானது. அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளும் சோபிக்க தவற, வங்கதேச மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட்டுகளையும், பூஜா வஸ்திரேகர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News