ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. மேற்கொண்டு கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியானது 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இதனையடுத்து நாடு திரும்ப இருந்த இந்திய அணி வீரர்கள் அதிகாலை டெல்லி வந்தடைந்னர். அதன்படி இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக விமான நிலையில் ஏராளமான ரசிகர்கள் வழிநெடுவே இந்திய வீரர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். மேற்கொண்டு தங்கும் விடுதிக்கு சென்ற இந்திய அணி வீரர்களுக்கு அங்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய அணி வீரர்கள் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அதன்பின் அணி வீரர்களிடம் ஒரு சில வார்த்தைகளையும் கூறியுள்ளார். மேலு டி20 உலகக்கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோருடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
மேற்கொண்ட பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷ இருவரும் இணைந்து பிரதமர் மோடிக்கு ‘நமோ 1’ என்ற இந்திய அணியின் ஜெர்ஸியை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து பிசிசிஐ தங்களது எக்ஸ் பக்கத்தில், “வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணி, இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்தது. உங்களது ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும், இந்திய அணிக்கு நீங்கள் வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.