ஷுப்மன், ஷமி, ராகுலை பாராட்டிய ரோஹித் சர்மா!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், தாவ்ஹித் ஹிரிடோய் மற்றும் ஜக்கர் அலி ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 228 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக தாவ்ஹித் ஹிரிடோய் 100 ரன்களையும், ஜக்கர் அலி 67 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 41 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விராட் கோலி 22, ஸ்ரேயாஸ் ஐயர் 15, அக்ஸர் படேல் 8 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் சதமடித்து அசத்தியதுடன் 101 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய கேஎல் ராகுல் 41 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 46.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “நீங்கள் எந்த விளையாட்டையும் விளையாடுவதற்கு முன்பு, நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். சேஸிங்கின் போது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு உணர்ச்சிகள் வெளிப்படும். ஆனால் நீங்கள் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். நாங்கள் ஏற்கனவே இந்த சூழ்நிலையில் இருந்திருக்கிறோம். அமைதியாக இருக்க டிரஸ்ஸிங் அறையில் நிறைய அனுபவம் உள்ளது.
இப்போட்டியின் இறுதிவரை கேஎல் ராகுல் மற்றும் ஷுப்மன் கில் மிகவும் நிதானமாக இருந்தனர். ஷுப்மன் கில்லின் தரத்தை நாங்கள் அறிவோம். அவர் சமீப காலமாக அற்புதமாக பேட்டிங் செய்து வருகிறார்.மேலும் அவர் இப்போட்டியில் கடைசி வரை களத்தில் இருந்ததைப் பார்க்க நன்றாக இருந்தது. முகமது ஷமி இவ்வாறு செயல்படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவரின் இந்த கம்பேக்கிற்காக நாங்கள் காத்திருந்தோம். ஏனெனில் அவர் அணிக்காக என்ன செய்வார் என்பது எங்களுக்கு தெரியும்.
Also Read: Funding To Save Test Cricket
ஒவ்வொரு முறையும் நாம் அவரிடம் பந்தைக் கொடுக்கும் போதும் அவர் அதில் ஏதாவது ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வருகிறார். பெரிய தருணங்களில் முன்னேற அவரைப் போன்றவர்கள் நமக்குத் தேவை. இப்போட்டியில் நாங்கள் கேட்ச்சுகள் மற்றும் ரன் அவுட்டை தவறவிட்டது போன ஓரிரு தவறுகளைச் செய்தோம். அந்த வாய்ப்புகளை நாங்கள் பயன்படுத்தியிருந்தால், முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.