ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக நாக்பூர், பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை, டெல்லி, லக்னோ, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, ராஜ்கோட், இந்தூர், பெங்களூரு, அகமதாபாத், சென்னை மற்றும் தர்மஷாலா உள்ளிட்ட 12 நகரங்களில் உள்ள மைதானங்கள் தீவிரமாக தயாராகி வருகிறது.

Advertisement

இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

Advertisement

இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெறும் தேதியான அக்டோபர் 15ஆக்கு பதிலாக வேறு தேதிக்கு மாற்றப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகின. அக்டோபர் 15ஆம் தேதி நவராத்திரி கொண்டாட்டத்தின் முதல் நாள் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டியை வேறு தேதிக்கு மாற்ற பிசிசிஐ-க்கு பாதுகாப்பு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இந்த கோரிக்கையை ஏற்று இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்தின் தேதியை பிசிசிஐ மாற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மட்டுமல்லாமல் இன்னும் சில அணிகள் மோதும் போட்டிகளும் மாற்றப்பட உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா பேசுகையில், இந்தியா-பாகிஸ்தான் போட்டி மட்டும் அல்ல மற்ற சில போட்டிகள் நடைபெறும் தேதியும் திருத்தம் செய்யப்பட உள்ளது என்று சுட்டிக்காட்டினார். இதுகுறித்து பேசிய ஜெய் ஷா “இரண்டு அல்லது மூன்று வாரியங்கள் அட்டவணையை மாற்றியமைக்கக் கோரியுள்ளன, அது அவர்களின் உரிமை. நாங்கள் ஐசிசியுடன் இணைந்து செயல்படுகிறோம். இது பல சவால்களுக்கு வழிவகுக்கும் என்பதால், இடங்கள் மாறாது.

நாம் பார்ப்பது என்னவென்றால், ஒரு அணிக்கு போட்டிகளுக்கு இடையில் 6 நாட்கள் இருந்தால், அதை ஐந்தாகக் குறைப்போம், ஒரு அணிக்கு இரண்டு நாட்கள் ஆட்டங்களுக்கு இடையில் இருந்தால், அதை மூன்று ஆக்குகிறோம். உலகக் கோப்பையில் போட்டிகளுக்கு இடையில் பயணம் செய்வதற்கும், ஓய்வெடுப்பதற்கும், பயிற்சி செய்வதற்கும் அணிகள் போதுமான நேரத்தைப் பெற வேண்டும்.”என்று கூறினார்.

Advertisement

எந்தெந்த போட்டிகளின் தேதிகள் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்பதை குறிப்பிட மறுத்த ஜெய் ஷா, இது இந்திய வாரியம் மற்றும் ஐசிசி-க்கு இடையே ஒருங்கிணைக்கப்பட வேண்டிய வேலை என்றார். அதுகுறித்து பேசிய அவர், “நான் அதில் தலையிடவில்லை. இடம் மாறாமல் இருப்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அகமதாபாத் போட்டி பண்டிகை நேரத்தில் வருவதால், அதற்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இறுதி முடிவு இன்னும் சில நாட்களில் தெளிவாகிவிடும். இந்தியாவில் இது போன்ற சிறிய மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கும்.” என்று கூறினார்.

உலகக் கோப்பை போட்டிகள் தொடங்க இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், டிக்கெட்டுகள் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. ஆனால் அது விரைவில் நடக்கும் என்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறினார். அதன்படி, “உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் மாநில வாரியங்களின் கூட்டத்தை நாங்கள் நடத்தினோம். அதில் ஒன்று அல்லது இரண்டு தவிர, அனைவரும் கலந்து கொண்டனர். எங்கள் டிக்கெட் பார்ட்னரையும் கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டோம்.

திங்கட்கிழமை வரை காலக்கெடு உள்ளது. அதன் பிறகு ஐசிசி மற்றும் பிசிசிஐ ஆகியவை டிக்கெட்டுகள், அவற்றின் கிடைக்கும் தன்மை, விலை மற்றும் பிற அனைத்து சிக்கல்கள் குறித்து கூட்டு அறிவிப்பை வெளியிடும். இந்த முறை எங்களிடம் இ-டிக்கெட் இல்லை. ஆனால் போட்டிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே ஏழெட்டு இடங்களில் நேரடி டிக்கெட்டுகள் தயாராக இருக்க ஏற்பாடு செய்வோம். அகமதாபாத் அல்லது லக்னோ போன்ற பெரிய இடங்களில் இ-டிக்கெட்டுகளை வைத்திருப்பது கடினமாக இருக்கும். பெரிய போட்டிகளில் அறிமுகம் செய்வதற்கு முன் இருதரப்பு தொடர்களில் சோதனை செய்வோம். எனவே, பேப்பர் டிக்கெட்டுகளை கையில் எடுத்து வர வேண்டியது கட்டாயமாகும்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News