இந்திய டெஸ்ட் அணியின் தடுப்புச்சுவர் என அழைக்கப்படுபவர் சட்டேஷ்வர் புஜாரா. அதிலும் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டை போல பொறுமையின் சிகரமாக எவ்வளவு வேகத்தில் பந்து வீசினாலும் அப்படியே தடுத்து நிறுத்தி அதிகப்படியான பந்துகளை எதிர்கொண்டு பவுலர்களை களைப்படைய வைத்து ரன்களை சேர்க்கும் ஸ்டைலை கொண்டுள்ள அவர் உலகத்தரம் வாய்ந்த டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார்.

Advertisement

கடந்த 2018/19இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் விராட் கோலி தலைமையில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 70 வருடங்களில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து தொடரை வென்று சரித்திரம் படைத்தது. அந்த வெற்றிக்கு 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து தொடர் நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றிய புஜாரா அதன்பின் 2 வருடங்களாக சதமடிக்க முடியாமல் தடுமாறினார்.

Advertisement

அதனால் பொறுமையிழந்த அணி நிர்வாகம் அடுத்த தலைமுறை வீரர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் கடந்த பிப்ரவரியில் சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் அதிரடியாக நீக்கியது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற ரஞ்சி கோப்பையிலும் சுமாராக செயல்பட்டதால் ஐபிஎல் தொடரில் சென்னை அணி நிர்வாகமும் கழற்றி விட்டதால் இந்தியாவுக்கு மீண்டும் விளையாட வேறு வழி தெரியாத புஜாரா இங்கிலாந்தின் பிரபல கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அதில் சசக்ஸ் அணிக்காக முதல் போட்டியிலேயே இரட்டை சதமடித்து பார்முக்கு திரும்பிய அவர் 700க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து விமர்சனங்களை நொறுக்கியதால் அதிரடியாக நீக்கிய அதே தேர்வுக்குழு தாமாக முன்வந்து தேர்வு செய்தது. அதனால் சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற ரத்து செய்யப்பட்டு 5வது டெஸ்ட் போட்டியில் அபார கம்பேக் கொடுத்த புஜாரா 2ஆவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்து வெற்றிக்காக போராடிய போதிலும் இந்தியா தோல்வியடைந்தது. 

அத்துடன் நாடு திரும்பாத அவர் தொடர்ந்து கவுண்டி தொடரில் நடைபெற்ற ராயல் லண்டன் ஒருநாள் தொடரில் சசக்ஸ் அணிக்காக மீண்டும் ரன் மெஷினாக எதிரணிகளைப் பந்தாடினார். அதுவும் கேப்டனாக பொறுப்பேற்று விளையாடிய அவர் வழக்கத்திற்கு மாறாக பெரும்பாலான போட்டிகளில் டி20 போல 150க்கும் மேற்பட்ட ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி 107, 174, 49*, 66, 132 என மொத்தமாக 9 போட்டிகளில் 623 ரன்களை விளாசினார். 

இந்நிலையில் இலங்கை தொடரில் நீக்கப்பட்டு ரஞ்சித் தொடரில் சுமாராக செயல்பட்டு நின்றபோது ஐபிஎல் தொடரில் தம்மை சென்னை வாங்கியிருந்தால் இந்த கம்பேக் கொடுத்திருக்க முடியாது என்று புஜாரா கூறியுள்ளார். அதிலும் சென்னை நிர்வாகம் தன்னை மீண்டும் வாங்காமல் விட்டது நன்மையை கொடுத்ததாக மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து பேசிய அவர்,“இது என்னுடைய வித்தியாசமான ஆட்டம் என்பதில் சந்தேகமில்லை. இங்கிலாந்தில் உள்ள பிட்ச்கள் சற்று பிளாட்டாக இருந்தாலும் பெரிய ஸ்கோர்களை அடிக்க அதிகப்படியான ஸ்டிரைக் ரேட்டில் விளையாட வேண்டும் என்ற எண்ணம் அவசியமாகிறது. அதில் நான் எப்போதும் மெனக்கெட்டு பயிற்சிகளை எடுத்தேன்.

கடந்த வருடம் சிஎஸ்கே அணியில் இடம் பிடித்திருந்தும் எந்த போட்டியிலும் விளையாடாமல் இருந்த போது இதர வீரர்கள் பயிற்சிகளை எடுத்தனர். அப்போது நாமும் இது போல் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன். அதன்பின் ராயல் லண்டன் ஒருநாள் தொடருக்கு முன்பாக பயிற்சிகளை எடுத்தேன். மேலும் கிரேண்ட் (கோச்) அவர்களிடம் பேசிய போது என்னுடைய சில ஷாட்களில் உழைக்க வேண்டியுள்ளதை தெரிந்து கொண்டேன்.

அவரது வழியில் பயிற்சியை எடுக்கும் போது என்னுடைய செயல்படுத்தும் முறை சிறப்பாக உள்ளதென்று அவர் பாராட்டியது எனக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்தது. குறிப்பாக பெரிய ஷாட்களில் அதிகப்படியான கவனம் செலுத்தினால் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் என்னாலும் சாதிக்க முடியும் என்று நம்பினேன்” என கூறினார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News