சாம்பியன்ஸ் கோப்பை 2025: பென் டக்கெட் அபார சதம்; ஆஸிக்கு 352 ரன்கள் இலக்கு!

Updated: Sat, Feb 22 2025 18:21 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் ஓவரிலேயே பவுண்டரியும், சிக்ஸரையும் விளாசிய பில் சால்ட் 10 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய ஜேமி ஸ்மித்தும் 15 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 43 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்பின் பென் டக்கெட்டுடன் இணைந்த ஜோ ரூட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் இருவரும் இணைந்து அபாரமாக விளையாடி தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்ததுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 158 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் 4 பவுண்டரிகளுடன் 68 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஜோ ரூட் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹாரி ப்ரூக்கும் 3 ரன்களுடன் நடையைக் கட்டினார். இருப்பினும் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டக்கெட் தனது சதத்தைப் பதிவுசெய்தார். 

அதேசமயம் அவருடன் இணைந்து விளையாடிய வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டோனும் 14 ரன்களுடன் நடையைக் கட்டினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பென் டக்கெட் 150 ரன்களைக் கடந்த அணியை நல்ல ஸ்கோரை நோக்கி அழைத்துச் சென்றார். அதன்பின் பென் டக்கெட் 143 பந்துகளில், 17 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 165 ரன்களைக் குவித்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

இறுதியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது பங்கிற்கு 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 21 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 351 ரன்களைக் குவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஸாம்பா மற்றும் மார்னஸ் லபுஷாக்னே தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை