சிபிஎல் 2024 குவாலிஃபையர் 2: ஆல் ரவுண்டராக அசத்திய மொயீன் அலி; இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கயானா!

Updated: Sat, Oct 05 2024 09:05 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான செயின்ட் லூசியா கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், கீரன் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறியது.  

இந்நிலையில் இத்தொடரில் இரண்டாவதாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணி எது என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கயானா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ராயல்ஸ் அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் ரஹ்கீம் கார்ன்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டி காக் 15 ரன்களுக்கும், ரஹ்கீம் கார்ன்வால் 19 ரன்களுக்கு என விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய அலிக் அதானாஸ் அதிரடியாக விளையாடும் முயற்சியில் 26 ரன்களுக்கும், கதீம் அலீன் 11 ரன்களுக்கும், கேப்டன் ரோவ்மன் பாவெல் 12 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மில்லர் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 36 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இதனால் பார்படாஸ் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கயானா அணி தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 3 விக்கெட்டுகளையும், மொயீன் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கயானா அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் மொயீன் அலி இணை தொடக்கம் கொட்த்தனர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர், 

இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 40 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம் மொயீன் அலியுடன் இனைந்த ஷாய் ஹோப் அபாரமாக விளையாடியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். அதன்பின் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷாய் ஹோப் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மொயீன் அலி 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

Also Read: Funding To Save Test Cricket

இதன்மூலம் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 14.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் பார்படாஸ் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியடன், இரண்டாவது அணியாக இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இருதுறையிலும் அசத்திய மொயீன் அலி ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார். இதையடுத்து கயானா அமேசன் வாரியர்ஸ் அணி நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை