இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டெஸ்ட்; தேவ்தத் படிக்கல் இடம்பெற வாய்ப்பு?

Updated: Thu, Feb 29 2024 12:27 IST
இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டெஸ்ட்; தேவ்தத் படிக்கல் இடம்பெற வாய்ப்பு? (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் என வெற்றியைப் பதிவுசெய்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணி இத்தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களு தயாராகி வருகின்றன. இதில் இந்திய அணி தொடரை வெற்றியுடன் முடிக்கும் முனைப்புடனும், இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றியைத் தேடும் முனைப்புடனும் இப்போட்டியை எதிர்கொள்ள உள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் ஒருசில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் நான்காவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பிற்கு இப்போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டு, முகமது சிராஜிற்கு ஓய்வளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் காயம் காரணமாக விலகிய கேஎல் ராகுலுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ராஜத் பட்டிதார் இத்தொடரில் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினார். அதிலும் குறிப்பாக நான்காவது டெஸ்ட் போட்டியில் அவர் 17 மற்றும் 0 ஆட்டமிழந்து ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளார். இதன் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து பட்டிதார் விலக்கப்பட்டு மற்றொரு அறிமுக வீரரான தேவ்தத் படிக்கல்லிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏனெனில் காயத்திலிருந்து மீளாமல் இருக்கும் கேஎல் ராகுல் தனது சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அவர் ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது. மேலும் ராஜத் பட்டிதாரும் தனது வாய்ப்புகளை வீணடித்துள்ளதால் அந்த இடத்தில் அறிமுக வீரரான தேவ்தத் படிக்கலை களமிறக்க இந்திய அணி நிர்வாகம் முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்பதும் உறுதியாகியுள்ளது.

இந்திய அணியின் உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், தேவ்தத் படிக்கல், சர்ஃப்ராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், ஜஸ்ப்ரித் பும்ரா. 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை