நடப்பாண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் தோனியின் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்று விட்டனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனி, தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் தோனி, மீண்டும் சர்வதேச அரங்கில் முக்கிய பொறுப்பில் செயலாற்ற உள்ளது பலரை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
இதற்கிடையில் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள தோனியின் அனுபவம் நிச்சயம் இளம் வீரர்களுக்கு உதவியாக இருக்கும் என முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய காம்பீர், “இது ஒரு நல்ல முடிவாக இருக்க வேண்டும். ஏனெனில் தோனியின் அனுபவமும், இக்கட்டான சூழ்நிலையில் அணியை வழிநடத்தும் திறனும் அவரிடம் ஏராளம். இது நிச்சயம் அணியின் இளம் வீரர்களுக்கு உதவியாக இருக்கும்.
ஏனெனில் அணியில் நிரைய இளம் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதிலும் ராகுல் சஹார், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இதுவரை எந்தவொரு உலகக்கோப்பை போட்டிகளிலும் விளையாடியதில்லை. அதனால் நிச்சயம் தோனி தனது அனுபவத்தை அவர்களிடம் பகிர்வார்” என்று தெரிவித்துள்ளார்.