உம்ரான் மாலிக்கை டி20 அணியில் சேர்த்திருக்க கூடாது - மதன் லால் தாக்கு!

Updated: Tue, Jul 12 2022 19:07 IST
Don't make Umran Malik play T20 cricket, asserts Madan Lal (Image Source: Google)

இந்தியா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. கடைசி போட்டியில் புவனேஸ்வர் குமார், பும்ரா போன்ற சீனியர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு உம்ரான் மாலிக், ஆவேஷ் கான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஆனால் அந்த முடிவு இறுதியில் இந்தியாவிற்கு தோல்வியில்தான் முடிந்தது. ஏனெனில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 215 ரன்கள் சேர்த்தது. இந்தியா சார்பில் ஹர்ஷல் படேல் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். எஞ்சிய 3 பவுலர்கள் 10-க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கினார். குறிப்பாக உம்ரான் மாலிக் 4 ஓவரில் 1 விக்கெட்டை எடுத்தாலும் 56 ரன்களை வாரி வழங்கினார்.

கடந்த வருட ஐபிஎல் தொடரில் ஒருசில போட்டிகளில் அசத்தியதால் இந்த வருடம் 4 கோடிக்கு தக்க வைக்கப்பட்டு ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அவர், தொடர்ச்சியாக 150 கி.மீ வேகத்தில் பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். குறிப்பாக 157.0 கி.மீ வேகப்பந்தை வீசி 22 வயதிலேயே ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக பந்தை வீசிய இந்திய பவுலராக சரித்திர சாதனை படைத்தார்.

இந்த அளவுக்கு வேகத்தில் பந்து வீசும் ஒருவர் இந்திய அணியில் இல்லாத காரணத்தாலும் இவரின் வேகத்துக்கு ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் சாதகமாக இருக்கும் என்பதாலும் வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் இவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் வேகத்துக்கு ஈடாக ரன்களையும் வாரி வழங்கும் இவரை தொடர்ச்சியாக 2, 3 வருடங்கள் சிறப்பாக செயல்படாமல் இந்திய அணியில் அவசரப்பட்டு தேர்வு செய்யக்கூடாது என்று கபில் தேவ் போன்ற ஜாம்பவான்களும் கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில் உம்ரான் மாலிக்கை டி20 அணியில் தேர்வு செய்திருக்க கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் மதன் லால் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “வேகப்பந்து வீச்சாளர்கள் டி20 கிரிக்கெட்டுக்கு முன்பாக முதலில் டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். டெஸ்ட் போட்டிதான் அவரைப் போன்ற பவுலரை உறுதியானவராக மாற்றக்கூடிய கிரிக்கெட். அவர் நல்ல பவுலர் ஆனாலும் அவரை இன்னும் நல்ல பவுலராக நீங்கள் உருவாக்க வேண்டும்.

அவருக்கு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பளித்து தொடர்ச்சியாக 10-15 ஓவர்கள் வீச வைத்தால் தான் விக்கெட்டுகள் எடுப்பது எப்படி என்பதை புரிய வைக்க முடியும். ஆனால் டி20 கிரிக்கெட்டில் அவரை சரமாரியாக அடிக்க பேட்ஸ்மென்கள் தயாராக உள்ளனர். ஏனெனில் அவரின் பந்துகள் பேட்ஸ்மேன்கள் அடிப்பதற்கு ஏற்றவாறு வருகிறது.

நான் ஏற்கனவே கூறியது போல் விக்கெட்டுக்கள் எடுக்காமல் பந்தை ஸ்விங் செய்யாமல் வேகத்தை மட்டும் கொண்டிருந்தால் எந்த பயனும் இல்லை. தற்போது கொஞ்சமும் அனுபவமற்றவராக இருக்கும் அவருக்கு தேவையான அனைத்து அனுபவமும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கிடைக்கும். நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் நிச்சயமாக அவரை டி20 அணியில் சேர்த்திருக்க மாட்டேன்” என்று கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை