துலீப் கோப்பை 2024: அகர்வால், பிரதாம் அரைசதம்; வலிமையான முன்னிலையில் இந்திய ஏ அணி!

Updated: Fri, Sep 13 2024 19:45 IST
Image Source: Google

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று தொடங்கிய மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா டி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தாலும், ஷம்ஸ் முலானி - தனூஷ் கோட்டியான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

அதன்பின் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 53 ரன்கள் சேர்த்த நிலையில் தனூஷ் கோட்டியான் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பிரஷித் கிருஷ்ணா 8 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் இந்தியா ஏ அணியானது முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களைச் சேர்த்துள்ளது. இதனையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷம்ஸ் முலானி 89 ரன்களில் நடையைக் கட்ட, இந்தியா ஏ அணி 290 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. 

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத்ஹ் தொடங்கிய இந்தியா டி அணியில் அதர்வா டைடே 4 ரன்களிலும், யாஷ் தூபே 14 ரன்களிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ரன்கள் ஏதுமின்றியும், சஞ்சு சாம்சன் 5 ரன்களிலும், ரிக்கி பூஸ் 23 ரன்களையும் சேர்த்த நிலையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் களமிறங்கிய தேவ்தத் படிக்கல் அபாரமாக விளையாடியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். மேலும் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தேவ்தத் படிக்கல் 15 பவுண்டரிகளுடன் 92 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் ஹர்ஷித் ரானா 31 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்காததால், அந்த அணி 183 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்தியா ஏ அணி தரப்பில் கலீல் அஹ்மத், ஆகிப் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 107 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய ஏ அணிக்கு கேப்டன் மயங்க் அகர்வால் - பிரதாம் சிங் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். 

Also Read: Funding To Save Test Cricket

தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின்னர் 56 ரன்கள் எடுத்த நிலையில் மயங்க் அகர்வால் தனது விக்கெட்டை இழக்க, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஏ அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களை எடுத்துள்ளது. இதில் பிரதாம் சிங் 59 ரன்களுடன் களத்தில் உள்ளார். இதனையடுத்து நாளை தொடங்கும் மூன்றாம் நாள் ஆட்டத்தை இந்தியா ஏ அணியானது 222 ரன்கள் முன்னிலையுடன் இன்னிங்ஸைத் தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை