இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் ரோகித்-ராகுல் இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து வந்தனர். 37 ஓவர்களை சந்தித்த இந்த ஜோடி அருமையான அடித்தளம் அமைத்து கொடுத்தது. சிறப்பான ஆடி வந்த ரோகித் சர்மா 36 ரன்கள் எடுத்து ராபின்சன் ஓவரில் சாம் கரணிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதனையடுத்து களமிறங்கிய புஜாராவும் 4 ரன்கள் எடுத்திருர்ந்த நிலையில் ஆண்டர்சன் ஓவரில் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்து வந்த நிலையில் மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த கேஎல் ராகுல் அரை சதம் அடித்து அசத்தினார்.
பின்னர் களமிறங்கிய ரஹானேவும் 5 பந்துகள் மட்டுமே சந்தித்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் இந்திய அணி ஒரு கட்டத்தில் 96 ரன்களுக்கு விக்கெட் ஏதும் இல்லாமல் இருந்த நிலையில் 125 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அதைத்தொடர்ந்து கேஎல் ராகுலுடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்து அடித்து ஆட ஆரம்பித்தார். இதற்கிடையில் ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இரண்டாம் நாள் ஆட்டம் 47 ஓவர்களுடன் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை எடுத்துள்ளது. இதில் கேஎல் ரகுல் 57 ரன்களுடனும், ரிஷப் பந்த் 7 ரன்களுடன் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.