இலங்கை அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியானது இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 29 லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.

Advertisement

இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஜோ ரூட் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோரது சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 427 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்களையும், கஸ் அட்கின்சன் 118 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை தரப்பில் அசிதா ஃபெர்ணாண்டோ 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடிய இலங்கை அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Advertisement

அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் நிஷன் மதுஷ்கா, திமுத் கருணரத்னே ஆகியோர் தலா 7 ரன்களுக்கும், பதும் நிஷங்கா 12 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.  பின்னர் களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் 22 ரன்களிலும், கேப்டன் தனஞ்செயா டி சில்வா ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் சண்டிமாலும் 23 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் ஒருபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய மிலன் ரத்நாயக்க 19 ரன்களிலும், பிரபாத் ஜெயசூர்யா 8 ரன்களிலும், லஹிரு குமாரா ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர். 

இறுதியில் அரைசதம் கடந்ததுடன் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 74 ரன்களை எடுத்திருந்த கமிந்து மெண்டிஸும் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 55.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 196 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஒல்லி ஸ்டோன், மேத்யூ பாட்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு டேனியல் லாரன்ஸ் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் 7 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் டேனியல் லாரன்ஸ் தனது விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணியானது ஒரு விக்கெட் இழப்பிற்கு 25 ரன்களைச் சேர்த்திருந்தது. இதனையடுத்து மூன்றாம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்டைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஆனால் அபாரமாக விளையாடிய ஜோ ரூட்  தனது 34அவது டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இதன்மூலம் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட்103 ரன்களைச் சேர்த்தார். இலங்கை அணி தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ, லஹிரு குமாரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர், இதன்மூலம் இலங்கை அணிக்கு 483 ரன்கள் இலக்காகவும் நியமிக்கப்பட்டது. அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியில் நிஷன் மதுஷ்கா 13 ரன்களுக்கும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பதும் நிஷங்கா 14 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.

Advertisement

இதன்மூலம் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை திமுத் கருணரத்னே 23 ரன்களுடனும், பிரபாத் ஜெயசூர்யா 3 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ஜெயசூர்யா 4 ரன்களுடன் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்த திமுத் கருணரத்னேவும் 55 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து இணைந்த ஏஞ்சலோ மேத்யூஸ் - தினேஷ் சண்டிமால் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. 

இதில் தினேஷ் சண்டிமால் அரைசதம் கடந்தார். பின் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஏஞ்சலோ மேத்யூஸும், 58 ரன்கள் எடுத்த நிலையில் தினேஷ் சண்டிமாலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் கேப்டன் தனஞ்செயா டி சில்வா அரைசதம் கடந்த கையோடு 50 ரன்களிலும், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மிலன் ரத்நாயக்கா 43 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, இலங்கை அணியின் தோல்வியும் உறுதியானது. பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்கலில் ஆட்டமிழந்தனர். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதனால் இலங்கை அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 292 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட கஸ் அட்கின்சன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News