லார்ட்ஸ் டெஸ்ட்: வாஷிங்டன் சுந்தர் அபாரம்; இந்திய அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
Lord's Test: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்த நிலையில் முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்களையும், ஜேமி ஸ்மித் 51 ரன்களுக்கும், பிரைடன் கார்ஸ் 56 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் அதிக பட்சமாக கேஎல் ராகுல் 13 பவுண்டரிகளுடன் 100 ரன்களையும், ரிஷப் பந்த் 8 பவுண்டரி 2 சிக்ஸர்கள் என 74 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 72 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக இந்திய அணியும் முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானதுடன் ஸ்கோரையும் சமன்செய்து அசத்தியது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் பென் ஸ்டோஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் 12 ரன்னிலும், ஒல்லி போப் 4 ரன்னிலும், ஸாக் கிரௌலி 22 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய ஹாரி புரூக் 23 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜேமி ஸ்மித் 8 ரன்களிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 33 ரன்களிலும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதன் காரணமாக இங்கிலாந்து அணி 192 ரன்களைச் சேர்த்து அல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்துஇந்திய அணி 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடவுள்ளது.