ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் - இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்!

Updated: Tue, Apr 30 2024 22:48 IST
ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் - இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (Image Source: Google)

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது நெருங்கிவரும் சூழலில் அத்தொடரின் மீதானா எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதன்படி வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், இதில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், அதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. 

இதன்காரணமாக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கும் இங்கிலாந்து அணியானது இத்தொடருக்கான 15 பேர் அடங்கிய அணியை இன்று அறிவித்துள்ளது. அந்தவகையில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர் தொடர்வார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

மேலும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜானி பேர்ஸ்டோவ், பில் சால்ட், வில் ஜேக்ஸ் ஆகியோரும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் காயம் காரணமாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்து வந்த அதிவேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்காக தனது கம்பேக்கை கொடுக்கவுள்ளார். 

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக இத்தொடரில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளன. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டதுள்ளது. 

ஏனெனில் ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் மே 21ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதேசமயம் இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் அணியுடன் டி20 தொடரில் விளையாடவுள்ளதால், ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து அணி வீரர்கள் பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் பங்கேற்க மட்டனர் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 

 

இதன் காரணமாக ஐபிஎல் அணிகளில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து வீரர்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னரே தங்கள் தாய்நாட்டிற்கு திரும்பவுள்ளனர். அதன்படி பார்த்தால் நடப்பு ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ஜோஸ் பட்லர், பில் சால்ட், வில் ஜேக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் என முன்னணி வீரர்கள் பிளே ஆஃப் சுற்றில் விளையாட மாட்டார்கள் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் பின்னடைவை சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், சாம் கரன், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டோன், ஆதில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டாப்லி, மார்க் வூட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை