இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்படும் மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ்; இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்க திட்டம்!

Updated: Mon, Aug 26 2024 11:26 IST
Image Source: Google

இங்கிலாந்து அணியானது தற்சமயம் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனையடுத்து அந்த அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது செப்டம்பர் 11ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது. 

இத்தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதேசமயம் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியும் கூடிய விரையில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை அணியில் இருந்து நீக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஏனெனில் சமீப காலமாக இங்கிலாந்து அணியில் இடம்பிடித்து வந்த மொயீன் அலி பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும் அளவில் செயல்படாதது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜானி பேர்ஸ்டோவும் சமீப காலங்களில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார். மேலும் நடந்துமுடிந்த தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரிலும் இவர்களது செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை.

அதேசமயம், இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் இளம் அறிமுக வீரர் ஜேக்கப் பெத்தெல் தேர்வு செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது 20 வயதான அவர் ஏற்கனவே 44 போட்டிகளில் 731 ரன்களை 138.18 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து சாதனை படைத்துள்ளார். பர்மிங்காம் ஃபீனிக்ஸ் தி ஹன்ட்ரட் 2024 இன் நாக் அவுட்களில் தனது கேமியோக்களுடன் ரன் குவிப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மொயீன் அலி மற்றும் ஜானி பேர்ஸ்டோவைத் தவிர, அந்த அணியின் ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோனும் சமீப காலங்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதன் காரணமாக, அவர்ர் மீண்டும் இங்கிலாந்து ஒருநாள் அணிக்காக விளையாடுவது சந்தேகம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் சமீப காலமாக மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர், 29.36 என்ற சாராசரியுடன், விளையாடிய கடைசி மூன்று போட்டிகளில் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்துள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

இதனால் எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடும் இங்கிலாந்து அணியில் இந்த வீரர்கள் இடம்பிடிப்பது சிரமம் என்ற தகவல்கள் வெளிவருகின்றன. அதேசமயம் இந்த வீரர்கள் நீக்கப்படும் பட்சத்தில் இவர்களுக்கு மாற்றாக இளம் வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்படும். ஆனாலும் அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் இதனை எவ்வாறு சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை