எங்கள் அணிக்கும், எங்கள் நாட்டிற்கும் பெருமையை தேடித் தர விரும்புகிறோம் - ஷாஹிதி!

Updated: Mon, Oct 23 2023 23:10 IST
எங்கள் அணிக்கும், எங்கள் நாட்டிற்கும் பெருமையை தேடித் தர விரும்புகிறோம் - ஷாஹிதி! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி சரித்திர வெற்றி பெற்று இருக்கிறது.இந்த தொடரில் ஏற்கனவே நடப்பு சாம்பியன் ஆக இருக்கும் இங்கிலாந்து அணியை டெல்லியில் வைத்து வீழ்த்தி எல்லோருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஆஃப்கானிஸ்தான் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 74 ரன்கள் உதவி உடன் 282 ரன்கள் 50 ஓவர்கள் முடிவில் எடுத்தது. இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இரண்டு ஓவர்களை மீதம் வைத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில், உலகக் கோப்பை தொடர் ஒன்றில் பாகிஸ்தான் அணியை முதல்முறையாக வீழ்த்தியது. 

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இது முதல் வெற்றியாகும். ஒரே உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் பெரிய அணியான பாகிஸ்தான் இரண்டையும் ஆஃப்கானிஸ்தான் வீழ்த்தி இருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக இருப்பதோடு, நடப்பு உலகக்கோப்பை தொடருக்கும் பெரிய சுவாரசியத்தை கூட்டி இருக்கிறது. 

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி, “இந்த வெற்றியை பெற்றதில் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் ஒரு தரமான அணியாக இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம். இனிவரும் போட்டிகளிலும் இதே போன்ற செயல்பாட்டை வெளிப்படுத்த காத்திருக்கிறோம். இன்றைய போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. 

ஏற்கனவே இங்கிலாந்து அணியை வீழ்த்திய நாங்கள் தற்போது பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தியுள்ளதில் மகிழ்ச்சி. எங்களது அணி ஆசியக் கோப்பை தொடரிலிருந்தே மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. இதே வெற்றியை இனிவரும் போட்டிகளிலும் பெற விரும்புகிறோம். எங்களால் முடிந்த அளவு பாசிட்டிவாக விளையாடி எங்கள் அணிக்கும், எங்கள் நாட்டிற்கும் பெருமையை தேடித் தர விரும்புகிறோம். இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடியதாக நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை