பாகிஸ்தான் தேர்வு குழு தலைவராக ஷாகித் அஃப்ரிடி நியமனம்!
சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் தேர்வு குழு தலைவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது.
இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா அதிரடியாக நீக்கப்பட்டார். இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக இருந்த ரமீஸ் ராஜா அண்மையில் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து நேற்று ஷாகித் அஃப்ரிடி தேர்வுக் குழுவின் இடைக்காலத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அப்துல் ரசாக், ராவ் இப்திகார், அஞ்சும் உள்ளிட்டோர் அடங்கிய தேர்வுக்குழுவை அஃப்ரிதி வழிநடத்துவார். மேலும் தேர்வுக்குழுவுக்கு ஹாரூன் ரஷித் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்.
தேர்வுக் குழு இடைக்காலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டது குறித்து பேசிய ஷாகித் அஃப்ரிடி கூறியதாவது, “எனக்கு மதிப்பளித்து இந்தப் பொறுப்பை வழங்கியது தொடர்பாக நான் பெருமை கொள்கிறேன். எனது திறமையின் மூலம் இந்தப் பணியைச் சிறப்பாக செய்வேன். பாகிஸ்தான் அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.