ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: ஆஸியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது. இதனையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி அட்டத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து, அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரெலிய அணி பலப்பரீட்சை நடத்தின.
இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் அலிசா ஹீலி 5 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த போப் லிட்ச்ஃபீல்ட் - எல்லிஸ் பெர்ரி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதங்களைக் கடந்ததுடன், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
இதில் எல்லிஸ் பெர்ரி 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 77 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த பெத் மூனி 24 ரன்களுக்கும், அனபெல் சதர்லேண்ட் 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில் மறுபக்கம் அபாரமாக விளையாடிய போப் லிட்ச்ஃபீல்ட் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். பின்னர் 17 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 119 ரன்களைச் சேர்த்த கையோடு லிட்ச்ஃபீல்ட் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் தஹ்லியா மெக்ராத் 63 ரன்களைச் சேர்த்த நிலையில், மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர்.
இதன் காரணமாக ஆஸ்திரேலிய மகளிர் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஸ்ரீசாரனி, தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அதன்பின் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ஷஃபாலி வர்மா 10 ரன்களிலும், ஸ்மிருதி மந்தனா 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 24 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இணை அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் தங்களுடைய அரைசதங்களைப் பதிவு செய்ததுடன், மூன்றாவது விக்கெட்டிற்கு 167 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த ஹர்மன்ப்ரீத் கவுர் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 89 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் ஜெமிமா ரோட்ரிக்ஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய தீப்தி சர்மா 3 பவுண்டரிகளுடன் 24 ரன்களிலும், ரிச்சா கோஷ் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 26 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 14 பவுண்டரிகளுடன் 127 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய அமஞ்சோத் கவுர் 2 பவுண்டரிகளுடன் 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
Also Read: LIVE Cricket Score
இதன் மூலம் இந்திய மகளிர் அணி 48.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறி சாதித்துள்ளது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆட்டநாயகியாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.