பகலிரவு டெஸ்ட் பயிற்சி ஆட்டம்: ஷுப்மன், ரானா அசத்தல்; இந்தியா அணி வெற்றி!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியானது ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிரான இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டிருந்தது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான பயிற்சி போட்டியானது நேற்று கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக இப்போட்டியின் முதல்நாள் ஆட்டம் முழுவதுமாக கைவிடப்பட்டது. இதையடுத்து தலா 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக இந்த ஆட்டம் நடைபெற்ற நிலையில், இதில் டஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய பிரதமர் லெவன் அணிக்கு சாம் கொண்டாஸ் - மேத்யூ ரென்ஷா இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ரென்ஷா 5 ரன்னிலும், குட்வின் 4 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கொண்டாஸ் மற்றும் ஜேக் கிளைடன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் கொண்டாஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜேக் கிளைடன் 40 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஒலிவியன் டேவிஸ், ஜேக் எட்வர்ட்ஸ், சாம் ஹார்ப்பர், ஐடன் ஓ கார்னர் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஹர்ஷித் ரானா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் கொண்டாஸுடன் இணைந்த ஹன்னோ ஜேக்கப்ஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய் சாம் கொண்டாஸ் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 107 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கொண்டாஸும், 61 ரன்னில் ஹன்னோ ஜேக்கப்ஸும் விக்கெட்டை இழக்க, பிரதமர் லெவன் அணி 43.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ரானா 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த்னர் இதில் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேஎல் ராகுல் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் விக்கெட்டை இழக்க, 45 ரன்களைச் சேர்த்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் அட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா 3 ரன்களில் அட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த ஷுப்மன் கில் - நிதிஷ் ரெட்டி இணையும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
Also Read: Funding To Save Test Cricket
இதில் அரைசதம் கடந்த நிலையில் ஷுப்மன் கில் பெவிலியன் திரும்ப, 42 ரன்களைச் சேர்த்து நிதீஷ் ரெட்டியும் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 27 ரன்னிலும், சர்ஃப்ராஸ் கான் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வஷிங்டன் சுந்தர் 42 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 46 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் பிரதமர் லெவன் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.