மிதாலி ராஜின் சாதனையை சமன்செய்த ஹர்மன்ப்ரீத் கவுர்!

Updated: Mon, Oct 14 2024 10:43 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 40 ரன்களையும், தஹ்லியா மெக்ராத் மற்றும் எல்லிஸ் பெர்ரி ஆகியோர் தலா 32 ரன்களைச் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ரேனுகா சிங் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஷஃபாலி வர்மா 20 ரன்னிலும், ஸ்மிருதி மந்தனா 6 ரன்னிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 16 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

பின்னர் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உடர் இணைந்த தீப்தி சர்மா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இருவரும் சேர்ந்து 63 ரன்கள் சேர்த்த நிலையில் தீப்தி சர்மா 29 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ரிச்சா கோஷ் ஒரு ரன்னில் வெளியேறினார். ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பொறுப்புடன் விளையாடி அரை சதம் கடந்துடன், இறுதிவரை ஆட்டமிழக்கால் 59 ரன்களைச் சேர்த்தார். இருப்பினும் இந்திய அணியால் 142 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.  இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த் வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இந்திய அணியின் அரையிறுதி கனவானது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவினாலும், இப்போட்டியில் அரைசதம் கடந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்மன்பிரீத் கவுர் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார். அதன்படி ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களைச் சேர்த்த இந்திய வீராங்கனை எனும் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் சாதனையை ஹர்மன்பிரீத் கவுர் சமன்செய்து அசத்தியுள்ளார். 

முன்னதாக மிதாலி ராஜ் 726 ரன்களைச் சேர்த்து முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது ஹர்மன்பிரீத் கவுரும் 726 ரன்களைச் சேர்த்து அசத்தியுள்ளார். இந்த பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 524 ரன்களுடன் மூன்றாம் இடத்திலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 407 ரன்களுடன் நான்காம் இடத்திலும் உள்ளனர். அதேசமயம் இந்த அரைசதத்துடன் சேர்த்து ஹர்மன்பிரீத் கவுர் டி20 உலகக்கோப்பை தொடரில் விளாசும் 5ஆவது அரைசதமாக இது அமைந்தது. இதன்மூலம் உலகக்கோப்பை தொடரில் அதிக அரைசதம் அடித்த இந்திய வீராங்கனை எனும் மிதாலி ராஜின் மற்றொரு சாதனையையும் ஹர்மன்பிரீத் கவுர் சமன்செய்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

மேற்கொண்டு ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் அரைசதம் கடந்த வீராங்கனைகள் பட்டியலில் மிதாலி ராஜ் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோரை ஹர்மன்பிரீத் கவுர் சமன்செய்துள்ளர். முன்னதாக மிதாலி ராஜ், ஸ்மிருதி மந்தனா ஆகியோர் தலா 2 முறை அடுத்தடுத்து அரைசதங்களை கடந்து அசத்திய நிலையில், தற்சமயம் ஹர்மன்பிரீத் கவுரும் 2 முறை அரைசதம் விளாசி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை