ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 3ஆவது போட்டியில் தோல்வியை சந்தித்ததால் கடைசி போட்டியில் வென்றால் தான் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்பெற தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

Advertisement

முன்னதாக இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் முதல் நாளின் முதல் மணி நேரத்திலேயே தாறுமாறாக சுழன்ற பிட்ச்சில் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான இந்திய பேட்ஸ்மேன்ன்கள் திண்டாடிய வேளையில் நம்பிக்கை நட்சத்திரமான புஜாரா மட்டும் 2வது இன்னிங்ஸில் நங்கூரமாக நின்று 59 ரன்கள் எடுத்து முடிந்தளவுக்கு போராடி அவுட்டானார்.

Advertisement

பொதுவாகவே நிதானம், பொறுமை, திறமை இவை அனைத்தும் சோதிக்கும் இடமே டெஸ்ட் கிரிக்கெட்டாகும். அதற்கு 100% பொருந்தக்கூடிய ஒரு வீரர் புஜாரா என்றால் மிகையாகாது. ஏனெனில் களமிறங்கும் பெரும்பாலான போட்டிகளில் நங்கூரமாக நின்று அதிக பந்துகளை எதிர்கொண்டு எதிரணி பவுலர்களை களைப்படையை வைத்து பெரிய ரன்களை குவித்து வெற்றிகளை தேடி கொடுக்கும் ஸ்டைலை கொண்ட அவர் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்க முக்கிய பங்காற்றினார்.

அப்படி டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் வீரராக தன்னை அடையாளப்படுத்தியதால் சதமடிக்கவில்லை என்பதற்காக கடந்த வருடம் கழற்றி விடப்பட்ட அவரை ஐபிஎல் தொடரில் சென்னை அணியும் விடுவித்தது. இருப்பினும் இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடி மிகச்சிறப்பாக செயல்பட்டு கம்பேக் கொடுத்த அவர் 100 போட்டிகளில் விளையாடிய 12வது இந்திய வீரராக சமீபத்தில் சாதனை படைத்தார்.

இந்நிலையில் இந்த நவீன கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா, ட்ரெண்ட் போல்ட் போன்ற பெரும்பாலான வீரர்கள் தங்களது கேரியரை நீட்டிப்பதற்காகவும் வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதிப்பதற்காகவும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டை இரண்டாவதாக பார்க்கும் நிலையில், டி20 கிரிக்கெட்டில் விளையாடினால் பணம் கிடைக்கும் என்று தெரிந்து அதில் விளையாட முயற்சிக்காமல் தமக்கு வரக்கூடிய தமது திறமைக்கேற்ற டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டும் புஜாரா மதிப்பளித்து முன்னுரிமை கொடுத்து விளையாடுவது அரிது என தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இந்த உலகில் பெரும்பாலான வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுத்து வெள்ளைப் பந்து கிரிக்கெட்டை இரண்டாவதாக தேர்ந்தெடுப்பதை பார்ப்பது மிகவும் கடினமாகும். இங்கே பல வீரர்கள் பணத்துக்காக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டை முதலாவதாக தேர்ந்தெடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டை 2வது வைத்திருக்கிறார்கள். அதனால் நல்ல டெக்னிக்குடன் நிறைய வீரர்கள் இருந்தாலும் புஜாராவை போன்ற பல வீரர்கள் உங்களுக்கு கிடைக்க மாட்டார்கள். எனவே இன்றைய உலகிற்கு பொருந்தாத புஜாரா வித்தியாசமானவர்.

Advertisement

எப்போதும் கடினமான சூழ்நிலைகளில் விளையாடுவதில் அவர் ஸ்பெஷலானவர். டெஸ்ட் கிரிக்கெட் 5 அல்லது 3 நாட்களாக இருந்தாலும் எப்போதும் அழுத்தமானது. அதில் அசத்தக்கூடிய மிகச்சிறந்த வீரரான அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய அரிதானவர். இந்தூரில் நடைபெற்ற போட்டியில் அக்சர் பட்டேல் தவிர்த்து 9 இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றமாகவே காணப்பட்டனர். ஆனால் புஜாரா மட்டும் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். இது போன்ற சுழலுக்கு சாதகமான மைதானங்களில் அவரால் கால்களை பயன்படுத்தி ரன்களை அடிப்பது மட்டுமல்லாமல் அதிகப்படியான நேரங்களையும் கட்டுப்படுத்த முடியும்.

மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடிக்கக்கூடிய அவருடைய டிஎன்ஏவில் விக்கெட்டை விடக்கூடாது என்பது இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் ஃபீல்டர்களை முறியடித்து சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்றுவார். அங்கே நல்ல பந்து கிடைத்தால் பவுண்டரியும் அடித்து விடுவார். மொத்தத்தில் இது போன்ற கடினமான சூழ்நிலைகளில் தம்மை உயர்ந்து நிற்க முடியும் என நிரூபித்துள்ள காரணத்தாலேயே புஜாராவுக்கு இந்திய அணி ஆதரவு கொடுத்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News