இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நேற்று ஹராரே நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 161 ரன்கள் குவிக்கவே பின்னர் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாட தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 25.4 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Advertisement

இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ராகுல் 5 பந்துகளை சந்தித்த நிலையில் ஒரு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருக்கு அடுத்து காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ராகுல் தற்போது மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அப்படி சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பிய கே.எல் ராகுல் முதல் போட்டியிலேயே ஒரு ரன் அடித்து ஏமாற்றத்தை தந்துள்ளார். 

Advertisement

இந்நிலையில் ராகுலின் இந்த ஆட்டம் குறித்து ஆதரித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப், “நீண்ட இடைவெளிக்கு பிறகு கே.எல் ராகுல் களத்திற்கு திரும்பி இருப்பதால் சற்று தடுமாறுவது இயல்புதான். அவரது பார்ம் பற்றி எனக்கு கவலை இல்லை. ஏனெனில் அவர் ஒரு தரமான பேட்ஸ்மேன். நேற்றைய போட்டியில் அவர் விக்கெட்டை இழந்ததும் நேராக அவர் வலை பயிற்சிக்கு சென்றார்.

இன்னும் இந்த தொடரில் ஒரு மேட்ச் இருக்கிறது. அந்த போட்டியில் அவர் பேட்டிங் செய்ய வரும்போது சிறிது நேரம் நின்று விளையாட வேண்டும். கொஞ்சம் போராட வேண்டும். ஒற்றைப்படை எண்ணில் விக்கெட்டை இழப்பது நடக்க கூடாத விஷயம் அல்ல.

காயத்திலிருந்து மீண்டும் வரும்போது ஒவ்வொரு பேட்டருக்கும் அவரது வாழ்க்கையில் அப்படி ஒரு கட்டம் இருக்கும். அதனால் நான் இரண்டாவது போட்டியில் அவர் ஆட்டம் இழந்தது குறித்து அதிகமாக கவலைப்பட மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 ஆவது ஒருநாள் போட்டி நாளை ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஹராரே நகரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News