ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் மீண்டும் கேப்டனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் விராட் கோலியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களின் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் நவீன கிரிக்கெட்டின் நாயகர்களாக செயல்பட்டு வரும் அவர்கள் கடைசியாக கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் விளையாடியிருந்தார்கள்.

Advertisement

இந்நிலைமையில் தற்போது மீண்டும் தேர்வாகியுள்ள அவர்கள் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதும் உறுதியாகியுள்ளது. முன்னதாக 2022 டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்திப்பதற்கு விராட் கோலியை தவிர்த்து ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், புவனேஸ்வர் குமார், தினேஷ் கார்த்திக் போன்ற சீனியர் வீரர்களின் சுமாரான செயல்பாடுகள் முக்கிய காரணமாக இருந்தது.

Advertisement

அதனால் அவர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை களமிறக்குவதற்காக சமீபத்திய தொடர்களில் ரிங்கு சிங், ஜெய்ஸ்வால் போன்ற நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் இந்த சீனியர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதால் இந்திய அணி வாருங்காலத்தை நோக்கி செல்வதற்கான முடிவை எடுக்கவில்லை என முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர்,“விராட் மற்றும் ரோஹித் ஆகியோரிடமிருந்து அணி நகர்ந்து விட்டது என்று நான் நினைத்தேன். ஏனெனில் கடந்த டி20 உலகக் கோப்பையில் சீனியர் வீரர்கள் அதிரடியாக விளையாடாமல் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததால் விமர்சனங்கள் வந்தன. ஆனால் இம்முறை உலகக் கோப்பை நடைபெறும் வெஸ்ட் இண்டீஸில் 180 – 160 ரன்கள் மட்டுமே அடிக்கக் கூடிய மைதானங்கள் இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்து இந்த முடிவை எடுத்துள்ளீர்கள்.

உண்மையை சொல்ல வேண்டுமெனில் கடந்த ஒரு வருடமாக நாம் எந்த சரியான பாதையையும் நோக்கி செல்லவில்லை. ஒருவேளை நீங்கள் ரோகித் மற்றும் விராட் கோலிக்கு வாய்ப்பு கொடுத்தால் கடந்த ஒரு வருடத்தில் விளையாடிய இளம் வீரர்களுக்கு தற்போது எந்த வாய்ப்பும் கிடைக்கப் போவதில்லை. 2022 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் விளையாடிய அணியும் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் விளையாடிய இந்திய அணியும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கிறது.

அதில் பாண்டியா, ஜடேஜா, பும்ரா, சிராஜ் ஆகியோர் மீண்டும் இருப்பார்கள். ஆனால் மிடில் ஆர்டர் மீண்டும் அதே போலவே இருக்கும். 3ஆவது இடத்தில் விராட் கோலி, 4ஆவது இடத்தில் சூர்யகுமார், 5ஆவது இடத்தில் பாண்டியா, 6ஆவது இடத்தில் சாம்சன் அல்லது ஜித்தேஷ், 7ஆவதாக ஜடேஜா பின்னர் எஞ்சிய வீரர்கள் இருப்பார்கள். எனவே முந்தைய அணிக்கும் தற்போதைய அணிக்கும் மிடில் ஆர்டரிலும் ஃபினிஷிங் செய்யும் இடத்திலும் பெரிய வித்தியாசம் ஏற்படப் போவதில்லை” என்று கூறியுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News