இலங்கை மகளிர் - வங்கதேச மகளிர் அணிகளுக்கு இடையேயான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை லீக் போட்டி நவி மும்பையில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்த நிலையில், அணியின் தொடக்க வீராங்கனை விஷ்மி குனரத்னே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் சமாரி அத்தபத்து - ஹாசினி பெரேரா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஹாசினி பெரேரா தனது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார். 

Advertisement

அதேசமயம் 46 ரன்களை எடுத்திருந்த சமாரி அத்தபத்து விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஹர்ஷிதா மாதவி, கவிஷா தில்ஹாரி தலா 4 ரன்களில் நடையைக் கட்டினார். அதன்பின் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹாசினி பெரேரா 13 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 85 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய வீராங்கனைகளில் நிலாக்‌ஷி டி சில்வா 37 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

Advertisement

இதன் காரணமாக இலங்கை மகளிர் அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் சொர்னா அக்தர் 3 விக்கெட்டுகளையும், ரபெயா கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் ஃபர்ஹானா ஹக் 7 ரன்னிலும், ருபியா ஹைதர் ரன்கள் ஏதுமின்றியும், சோபனா மொஸ்டாரி 8 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

பின்னர் இணைந்த ஷர்மின் அக்தர் மற்றும் கேப்டன் நிகர் சுல்தானா இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்களுடைய அரைசதங்களை கடந்ததுடன், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் மிரட்டினர். பின்னர் அதிரடியாக விளையாடி வந்த நிகர் சுல்தானா 6 பவுண்டரிகளுடன் 77 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஷொர்னா அக்தரும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் ஷர்மின் அக்தர் 64 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிலையிலும், மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். 

Also Read: LIVE Cricket Score

இதனால் வங்கதேச மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை மட்டுமே சேர்த்தது. இலங்கை தரப்பில் கேப்டன் சமாரி அத்தபத்து 4 விக்கெட்டுகளையும், சுகந்திகா குமாரி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் இலங்கை மகளிர் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய ஹாசினி பெரேரா ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். 

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News