வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் நாக்பூரில் கோலாகலமாக தொடங்குகிறது. உலகின் டாப் 2 அணிகளான இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்தும் இத்தொடரில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட ஏராளமான உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் நேருக்கு நேர் மோதுவதால் உலகம் முழுவதிலும் இத்தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இத்தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது.

Advertisement

இந்நிலையில், இம்முறை நாக்பூரில் நடைபெறும் முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் எப்படியாவது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுத்து விட்டால் எஞ்சிய வெற்றியை நேதன் லயன் தன்னுடைய அனுபவத்தால் வசமாக்கி விடுவார் என்று முன்னாள் வீரர் மிட்சேல் ஜான்சன் கூறியுள்ளார். 

Advertisement

இதுகுறித்து பேசிய அவர், “நியாயமான முறையில் சுழல் பந்து வீச்சு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த தொடரின் ஆரம்பத்திலேயே ஒரு சில முறை ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோரை குவித்தால் அது இந்தியா மீது ஆரம்பத்திலேயே அழுத்தத்தை திருப்பிப் போடும். இத்தொடருக்காக ஆஸ்திரேலியர்கள் 4 ஸ்பின்னர்களை அழைத்துச் சென்றுள்ளார்கள். அதில் நேதன் லயனுடைய தரத்தையும் அனுபவத்தையும் சாதனைகளையும் இந்தியர்கள் நிச்சயமாக மதிப்பார்கள். 

இருப்பினும் இதர ஸ்பின்னர்களை அடிக்க பயப்பட மாட்டார்கள். மேலும் எப்போதும் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய வீரர்கள் தங்களுடைய கால்களை பயன்படுத்தி சரியாக அடிப்பார்கள். மேலும் 2008க்குப்பின் முதல் முறையாக நாக்பூரில் இந்த வாரம் ஆஸ்திரேலியா ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அங்கே கடந்த முறை ஜேசன் கிரேஜா 12 விக்கெட்களை எடுத்தார். 

அந்த வகையில் இம்முறையும் புற்கள் இல்லாமல் ஆரம்பத்திலே பிளாட்டான பிட்ச் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதனால் அங்கே ஸ்விங் இருக்காது என்பதால் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் கடினமான வேலைகளை செய்ய வேண்டும். ஆனால் அங்கே இருக்கும் எக்ஸ்ட்ரா பவுன்ஸை பயன்படுத்தி நேதன் லயன் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் நாக்பூரில் சிறப்பாக செயல்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News