இந்த முறை தவறவிட்டால் இந்திய அணி அடுத்த 3 உலகக்கோப்பையில் வெல்ல முடியாது - ரவி சாஸ்திரி!

Updated: Mon, Nov 13 2023 22:40 IST
இந்த முறை தவறவிட்டால் இந்திய அணி அடுத்த 3 உலகக்கோப்பையில் வெல்ல முடியாது - ரவி சாஸ்திரி! (Image Source: Google)

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல தவறினால் அடுத்த மூன்று உலகக்கோப்பையில் இந்திய அணியால் சாம்பியன் பட்டம் வெல்லவே முடியாது என முன்னாள் இந்திய வீரரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த சில தினங்களில் நிறைவடைய உள்ளது.

இந்த தொடரின் லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், தென் ஆப்ரிக்கா அணியும் மோத உள்ளன.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியை போன்றே இந்த முறையும் இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளதால், இந்தியா – நியூசிலாந்து இடையேயான போட்டி மீது அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்தநிலையில், நடப்பு உலகக்கோப்பை தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் இந்திய வீரரும், இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, இந்த முறையும் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தவறவிட்டால் அடுத்த மூன்று உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “இந்திய அணி இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்ல தவறிவிட்டால் அடுத்த மூன்று உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்லவே முடியாது என்றே கருதுகிறேன். தற்போது கிடைத்துள்ள வாய்ப்பு அடுத்தடுத்த தொடர்களில் கிடைக்குமா என்பது தெரியவில்லை. இந்திய அணியில் 7-8 வீரர்கள் தற்போது சிறப்பான பார்மில் உள்ளனர். 

தற்போதைய இந்திய அணியில் இருக்கும் பெரும்பாலான சீனியர் வீரர்கள் அடுத்த உலகக்கோப்பை தொடர் வரை விளையாட வாய்ப்பு இல்லை என்பதால் இந்த முறை இந்திய அணி எப்படியாவது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியாக வேண்டும். பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்திலும் இந்திய அணி தற்போது வலுவான அணியாக உள்ளது, இதே போன்ற ஒரு அணியை மீண்டும் உருவாக்க பல வருடங்கள் ஆகிவிடும்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை