IND vs AUS, 1st ODI: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி!

Updated: Fri, Sep 22 2023 21:44 IST
Image Source: Google

உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றனர். இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று மொஹாலில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். 

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஷ் - டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடி வீரர் மிட்செல் மார்ஷ் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் முகமது ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் வார்னருடன் இணைந்த ஸ்டீவ் ஸ்மித் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் அரைசதம் கடந்த கையோடு, சிக்சர் அடிக்க முயற்சித்து 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித்தும் 41 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.

பின்னர் இணைந்த மார்னஸ் லபுஷாக்னே - கேமரூன் க்ரீன் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓரளவு தாக்குப்பிடித்தனர். இதில் மார்னஸ் லபுஷாக்னே 39 ரன்களுக்கும், காமரூன் க்ரீன் 31 ரன்களிலும் என துரதிர்ஷ்டவசமாக தங்களது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் இணைந்த ஜோஷ் இங்கிலிஸ் - மார்கஸ் ஸ்டொய்னிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அதிரடியாக விளையாடி வந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் 29 ரன்களிலும், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோஷ் இங்கிலிஸ் 45 ரன்கலிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய மேத்யூ ஷார்ட், சீன் அபேட் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதில் சீன் அபேட்டின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் முகமது ஷமி தனது 5 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார். 

இறுதியில் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒருசில் பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷுப்மன் கில் - ருதுராக் கெய்க்வாட் இணை தொடக்கம் கொடுத்தனர். தொடக்கம் முதலே இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 142 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர் 

பின் 71 ரன்கள் எடுத்திருந்த ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்து 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 74 ரன்களை எடுத்திருந்த ஷுப்மன் கில்லும் ஆடம் ஸாம்பா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

பின்னர் இணைந்த கேப்டன் கேஎல் ராகுல் - இஷான் கிஷன் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓரளவு தாக்குப்பிடித்தனர். இதில் ஒருபக்கம் கேஎல் ராகுல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், மறுமுனையில் அதிரடியாக விளையாட நினைத்த இஷான் கிஷன் 18 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் வழக்கத்திற்கு மாறாக இன்றைய போட்டியில் ஸ்வீப் ஷாட்டை தவிர்த்து ரன்களைச் சேர்த்தார். அப்போதும் அவர் கொடுத்த மூன்று கேட்ச் வாய்ப்புகளை ஆஸ்திரேலிய வீரர்கள் தவறவிட்டனர். அதனைப் பயன்படுத்திக் கொண்ட சூர்யகுமார் யாதவ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 3ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்தார். ஆனால் அரைசதம் கடந்த அடுத்த பந்திலேயே தூக்கி அடிக்க முயற்சித்த சூர்யகுமார் யாதவ், மிட்செல் மார்ஷிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

அதேசமயம் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கேஎல் ராகுல் அரைசதம் கடந்ததுடன், அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 48.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. 

TAGS

அதிகம் பார்க்கப்பட்டவை