இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கியது. ஈரப்பதம் காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். 

Advertisement

இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணியில் ஸகிர் ஹசன் ரன்கள் ஏதுமின்றியும், ஷாத்மான் இஸ்லாம் 24 ரன்களிலும், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 31 ரன்களிலும் என அடுதடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் வங்கதேசம் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் முதல்நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. வங்கதேச அணி தரப்பில் மொமினுல் 40 ரன்களுடனும், முஷ்ஃபிக்கூர் ரஹீம் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

Advertisement

இதனையடுத்து நடைபெற இருந்த இப்போட்டியின் இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் ஆட்டங்கள் தொடர் மழை மற்றும் ஈரப்பதம் காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. இதனால் இப்போட்டியானாது மீண்டும் நடைபெறுமா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழத்தொடங்கியது.  இந்நிலையில் இன்றைய தினம் இப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டமானது குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கியது. அதன்படி வங்கதேச அணி தரப்பில் மொமினுல் ஹக் மற்றும் முஷ்ஃபிக்கூர் ரஹிம் இணை இன்னிங்ஸைத் தொடங்கினர். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷ்ஃபிக்கூர் ரஹிம் 11 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொமினுல் ஹக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின்னர் மொமினுல் ஹக்குடன் இணைந்த லிட்டன் தாஸும் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். பின்னர் அதிரடியாக விளையாட முயற்சித்த லிட்டன் தாஸ் 13 ரன்களைச் சேர்த்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் ரோஹித் சர்மாவின் அபாரமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷாகிப் அல் ஹசனும் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மொமினுல் ஹக் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 13அவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணியானது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் மொமினுல் ஹக் 102 ரன்களுடனும், மெஹிதி ஹசன் மிராஸ் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News