IND vs ENG, 5th Test: அஸ்வின் அபார பந்துவீச்சு; இங்கிலாந்து இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா!

Updated: Sat, Mar 09 2024 14:11 IST
IND vs ENG, 5th Test: அஸ்வின் அபார பந்துவீச்சு; இங்கிலாந்து இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந (Image Source: Google)

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்று அசத்தியது. ஆனால் அதன்பின் நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவுசெய்து அசத்தியதுடன், 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஸாக் கிரௌலியைத் தவிர மற்ற எந்த வீரரும் பெரிதளவில் சோபிக்க தவறியதால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. 

இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஆகியோர் அடுத்தடுத்து சதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். அதன்பின் 103 ரன்களில் ரோஹித் சர்மாவு, 110 ரன்களில் ஷுப்மன் கில்லும் தங்களது விக்கெட்டை இழந்தனர். 

மேலும் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்களையும், சர்ஃப்ராஸ் கான் 56 ரன்களையும், அறிமுக வீரர் தேவ்தத் படிக்கல் 65 ரன்களையும் சேர்த்ததன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 477 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சோயப் பஷீர் 5 விக்கெட்டுக்ளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன், டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

அதன்பின் 259 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தொடக்க வீரர்கள் பென் டக்கெட் 2 ரன்களிலும், ஸாக் கிரௌலி ரன்கள் ஏதுமின்றியும், ஒல்லி போப் 19 ரன்களிலும் என அடுத்தடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த ஜோ ரூட் - ஜானி பேர்ஸ்டோவ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜானி பேர்ஸ்டோவ் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 39 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, சோயப் பஷீர், மார்க் வுட் ஆகியோரும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

ஆனாலும் மறுபக்கம் பொறுபான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 12 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 195 ரன்களிலேயே அல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை