நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்ற நிலையில் மூன்றாவது போட்டி இந்தூரில் இன்று நடைபெற்றது.

Advertisement

இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணிக்காக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 212 ரன்கள் சேர்த்தனர். ஒரே ஓவரில் இருவரும் சதம் பதிவு செய்து மாஸ் காட்டினர்.

Advertisement

அதன்பின் ரோஹித் சர்மா 85 பந்துகளில் 101 ரன்கள் குவித்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஷுப்மன் கில், 78 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய இஷான் கிஷன், கோலி, சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தங்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அந்த சமயத்தில் இந்திய அணிக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை.

இதையடுத்து ஹர்திக் பாண்டியா மற்றும் ஷர்துல் தாக்கூர் இணைந்து 54 ரன்களுக்கு 7ஆவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தாக்கூர், 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆனால் அதிரடியாக விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா, 38 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். 

இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ஜேக்கப் டஃபி, பிளைர் டிக்னர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் வழக்கம் போல தொடக்க வீரர் ஃபின் ஆலன் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த டெவான் கான்வே - ஹென்றி நிக்கோலஸ் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

பின் 42 ரன்களில் நிக்கோலஸ் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய டெவான் கான்வே சதமடித்து அசத்தினார். இது அவரது 3ஆவது ஒருநாள் சதமாகும். அதன்பின் 12 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 138 ரன்களைச் சேர்த்திருந்த டெவான் கான்வே, உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து களமிறங்கிய டெரில் மிட்செல் 24, கேப்டன் டாம் லேதம் 0, கிளென் பிலீப்ஸ் 5 ரன்கள் என அடுத்தடுத்து ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். அதன்பின் முதல் போட்டியில் சதமடித்து அசத்திய மைக்கேல் பிரேஸ்வெல் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த லோக்கி ஃபர்குசன், ஜேகப் டாஃபி ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

அதன்பின் இறுதிவரை போராடிய மிட்செல் சாண்ட்னர் 34 ரன்கள்  சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, நியூசிலாந்து அணி 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 295 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சஹால் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Advertisement

இதன்மூலம் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. இதன்மூலம் ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News