IND vs SL,2nd ODI: குல்தீப், சிராஜ் அசத்தல்; 215 ரன்னில் இலங்கை ஆல் அவுட்!
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை இலங்கை அணி 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.
இந்தியா - இலங்கை இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.
அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ - நுவனிந்து ஃபெர்னாண்டோ இணை களமிறங்கினர். இதில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 20 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த நுவனிது ஃபெர்னாண்டோ - குசால் மெண்டிஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
அதன்பின் 34 ரன்களில் குசால் மெண்டிஸ் ஆட்டமிழக்க, அடுத்து வந்த தனஞ்செய டி சில்வா ரன் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இருப்பினும் அறிமுக வீரராக களமிறங்கிய நுவனிந்து ஃபெர்னாண்டோ அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 50 ரன்களைச் சேர்த்த நுவனிந்து ஃபெர்னாண்டோ தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து களமிறங்கிய சரித் அசலங்கா 15, நட்சத்திர வீரர் தசுன் ஷனகா 2, வநிந்து ஹசரங்கா 21, சமிகா கருணரத்னே 17 என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதியில் துனித் வெல்லலகே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 32 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
ஆனால் பின் வரிசை வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியதால் 39.4 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.